Saturday 9 December 2023

வெளி மாவட்ட அழைப்பு

நேற்று சென்னையிலிருந்து ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதாவது , அவரது நண்பர் ஒருவருக்கு சேலம் அருகே 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் அவர் முழுமையாக தேக்கு பயிரிட விரும்புகிறார் ; ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக ஆலோசனை வழங்க முடியுமா என்று கேட்டிருந்தார். இருவரும் ஊருக்கு வந்து என்னை நேரடியாகச் சந்திக்க விரும்புவதாகவும் நாம் செயல் புரிந்திருக்கும் தேக்கு வயல்களை நேரில் காண விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். நான் பதில் மின்னஞ்சல் அனுப்பினேன். இன்று என்னைத் தொடர்பு கொண்டு பேசினார்கள்.  

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எவ்விதம் அவர்கள் ‘’காவிரி போற்றுதும்’’ குறித்து அறிந்தார்கள் என்று கேட்டேன். நமது வலைப்பூவை பல ஆண்டுகளாக வாசிப்பதாகக் கூறினார்கள். வலைப்பூ மட்டுமே நாம் எழுதுகிறோம். வேறு எந்த சமூக ஊடகத்திலும் இல்லை. அவ்வாறு இருப்பினும் பலர் வாசிக்கிறார்கள் என்பதை அறிய நேர்ந்தது உவகை அளித்தது. 

முதல் முறை பேசுகிறோம் என்ற போதும் நண்பர் ‘’காவிரி போற்றுதும்’’ மேற்கொள்ளும் செயல்கள் குறித்து பல நற்சொற்களையும் பாராட்டுக்களையும் உரைத்தார். ‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளனாக என்னால் ஒரு விஷயம் மட்டு்மே சொல்ல முடியும். இந்த நற்சொற்களுக்கும் பாராட்டுக்களுக்கும் உரியவர்கள் செயல் புரியும் கிராமத்தின் மக்களே. அடியேன் எளிய கருவி மட்டுமே. 

நண்பரிடம் 3 விஷயங்கள் சொன்னேன். 

(1) இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மக்கிய சாண எருவை இடுங்கள். ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்கும் இடையே 12 அடி இடைவெளி இருக்க வேண்டும். 

(2) தேக்கு மரத்துக்கு வாரத்துக்கு குறைந்தபட்சம் 2 நாட்கள் தண்ணீர் விட வேண்டும். செவ்வாய் வெள்ளி என இரண்டு நாட்களும் தண்ணீர் விட வேண்டும். ஒரு குடம் அளவு தண்ணீர் போதுமானது. 

(3) நமக்கு அந்த தாவரத்திடமிருந்து தேவை அதன் பத்து அடி உயர தண்டு மட்டுமே. எனவே குறைந்தபட்சம் பத்து அடி உயரத்துக்கு பக்கக் கிளைகள் ஏதும் இல்லாதவாறு ‘’கவாத்து’’ செய்ய வேண்டும். 

இந்த 3 விஷயங்களை மனதில் உறுதி செய்து கொண்டு செயலில் இறங்குமாறு கூறினேன். 

இன்னும் ஓரிரு நாளில் சேலம் வருவதாகக் கூறியிருக்கிறேன். 6 ஏக்கர் வயலை நேரடியாகப் பார்ப்பது அந்த வயலின் சூழலை அவதானிக்கவும் அதற்கு ஏற்றார் போல திட்டமிடவும் உகந்தது.