Saturday 9 December 2023

நீண்ட நாள் நண்பன்

 எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். எனது நீண்ட நாள் நண்பன். தற்போது மும்பையில் வசிக்கிறான். விளையாட்டுக்கான தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறான். விவசாயம் சார்ந்த பணிகளில் ஆர்வமுடையவன். மும்பை சென்ற பின் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை என்ற மனக்குறை அவனுக்கு இருக்கிறது. ஊரில் 10 ஏக்கர் நிலம் வாங்கி அதில் தேக்கு பயிரிட வேண்டும் என்று விரும்புகிறான். ‘’காவிரி போற்றுதும்’’ தேக்கில் காட்டும் ஆர்வம் அவனுக்கு அந்த எண்ணத்தை உருவாக்கியுள்ளது. நமது தளத்தில் வெளியாகும் தேக்கு குறித்த பதிவுகளை தொடர்ச்சியாக வாசித்திருக்கிறான். நான்கு நாட்களுக்கு முன் மும்பையிலிருந்து ஃபோன் செய்து தேக்கு பயிரிட 10 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடு என்றான். நாம் ரியல் எஸ்டேட் தொழிலிலும் இருப்பதால் ஒரு பார்ட்டி என்னிடம் விற்றுக் கொடுக்குமாறு சொன்ன 10 ஏக்கர் நிலம் குறித்து சொன்னேன். நேற்று மாலை அவனிடமிருந்து ஃபோன் அழைப்பு. ஒரு திருமணத்துக்காக திருச்சி வந்திருப்பதாகச் சொன்னான். அங்கிருந்து கோவிந்தபுரம் போதேந்திராள் சன்னிதி வந்து வழிபாடு நடத்தி விட்டு ஊருக்கு வருவதாகக் கூறினான். நான் காலையில் அவனுக்காகக் காத்திருந்தேன். பேருந்தில் வந்தான். அவனை அழைத்துக் கொண்டு தேக்கு பயிரிட்டிருக்கும் இடத்துக்குக் கொண்டு சென்று காட்டினேன். மரக்கன்றுகள் நட்டு எத்தனை வருடங்கள் ஆகின்றன என்று கேட்டான். 15 மாதங்கள் என்று சொன்னேன். அவனால் நம்ப முடியவில்லை. இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கிறதே என மிகவும் ஆச்சர்யப்பட்டான். பின்னர் அவனுக்குப் பொருத்தமான நிலம் என நான் எண்ணிய வயலைக் கொண்டு சென்று காட்டினேன். அவனுக்கு இடம் பிடித்திருந்தது. அங்கிருந்து வைத்தீஸ்வரன் கோவில் சென்று வைத்தியநாத சுவாமி தையல்நாயகி அம்பாளை வணங்கினோம். மதியம் 12.10க்கு சோழன் எக்ஸ்பிரஸில் அவன் திருச்சி செல்ல வேண்டும். 11.50க்கு வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையம் வந்தோம். அவனை திருச்சிக்கு ரயிலேற்றி விட்டு விட்டு நான் மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பினேன்.