Wednesday 6 December 2023

விஸ்வகர்மா

தொழில் தேவைக்காக வீட்டில் இருந்த நகை ஒன்றை வங்கியில் அடமானம் வைத்திருந்தேன். அதனை மீட்க நேற்று நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். 

நகை மதிப்பீட்டாளர் ஒரு பெண்மணி. அவரது உதவியாளரும் ஒரு பெண்மணி. அந்த வங்கி ஒரு சிறிய கிளை. நகருக்கு மிக அருகில் அடுத்திருக்கும் கிராமத்தின் கிளை. மேலாளர், காசாளர் என இரு வங்கி ஊழியர்கள். நகை மதிப்பீட்டாளர் வங்கியின் நிரந்தர ஊழியர் அல்ல ; ஒப்பந்த ஊழியர். கிராமக் கிளை என்பதால் அந்த வங்கியின் வணிகம் அதிகமும் தங்க நகை அடகுக் கடனே. எனவே அங்கே நகை மதிப்பீட்டாளரே முக்கிய நபர். அவர் எப்போதும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பார். 

’’வணக்கம் ! அம்மா’’ என்று சொல்லி நகை மதிப்பீட்டாளரின் எதிரில் அமர்ந்தோம். 

புன்னகையுடன் ‘’வணக்கம் சார்’’ என்றார். 

நகைக்கடன் அட்டையைக் கொடுத்தோம். எவ்வளவு தொகை செலுத்தப்பட வேண்டியது என்பதை அட்டையில் குறித்துக் கொடுத்தார். சலானை பூர்த்தி செய்து தொகையை காசாளரின் சாளரத்தில் அளித்தோம். ஒப்புகைச் சீட்டை காசாளர் அளித்தார். நாங்கள் நகை மதிப்பீட்டாளரின் எதிரில் அமர்ந்து கொண்டோம். 

‘’எனக்குத் தெரிந்து ஒரு பெண் நகை மதிப்பீட்டாளராக நியமனம் ஆகியிருப்பது இங்கு தான் என்று நினைக்கிறேன்’’ என்றேன். 

நகை மதிப்பீட்டாளர் முகம் புன்னகையால் ஒளிர்ந்தது. 

‘’நாகப்பட்டினத்தில் ஒரு அம்மா நகை மதிப்பீட்டாளராக இருக்காங்க சார்’’ என்றார். 

மதிப்பீட்டாளரின் உதவியாளர் ‘’கடலூர்ல ஒரு அம்மா இருக்காங்க சார்’’ என்றார். 

‘’நம்ம மாவட்டத்துல நீங்க தான் மேடம்’’ என்றேன்.

அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. 

‘’நாங்க விஸ்வகர்மா சார்’’ என்றார். 

‘’ஓ ! அப்படியா’’ என்றேன். தொடர்ந்து , ‘’நிறைய ஸ்பெஷாலிட்டிஸ் கொண்ட சமூகம் அது’’ என்று சொன்னேன். 

அந்த இரு பெண்களுக்கும் ஆச்சர்யம். என்ன சொல்லப் போகிறேன் என்று. 

‘’விஸ்வகர்மா மக்கள் கன்யாகுமரில இருந்து காஷ்மீர் வரைக்கும் இருக்காங்க. அதனால அது ஒரு ஆல் இண்டியா கம்யூனிட்டி. குறைஞ்சது 5000 வருஷ வரலாறு அவங்களுக்கு இருக்கு. நம்ம நாட்டு மக்கள் செல்வத்துக்கான கடவுளா லஷ்மியை கும்பிடறாங்க. லஷ்மி விதவிதமான பொன் நகைகளை விரும்பி அணியக் கூடியவங்க. அம்பாளுக்கும் பொன் ஆபரணங்கள் மேல பிரியம் அதிகம். லலிதா சகஸ்ர நாமம், சௌந்தர்ய லஹரி போன்ற நூல்கள் அம்பிகை விரும்பி அணியும் பொன் ஆபரணங்கள் பத்தி சொல்ற படைப்புகள். அப்ப அந்த காலத்துலயே விதவிதமான பொன் நகைகள் செஞ்சிருக்காங்க. அதப் பத்தி மக்கள் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்குன்னு தானே அர்த்தம்.’’

கண்கள் பெரிதாக விரிய ‘’ஆமாம் சார்’’ என்றனர். 

‘’இப்ப உலகத்துல அமெரிக்கா கிட்ட இருக்கற தங்கம்னா அது அவங்களோட அரசு தலைமை வங்கில தங்கக்கட்டியா இருப்பு வச்சிருப்பாங்க. அரசாங்கத்துக்கிட்ட மட்டும் தான் தங்கம் இருக்கும். வீடுகள்ல தங்கம் இருக்காது. அதாவது பெண்கள் தங்கத்துல நகை செஞ்சு போட்டுக்க மாட்டாங்க.’’

‘’அங்கல்லாம் பெண்கள் தங்க நகை வாங்க மாட்டாங்களா ?’’ என்று நம்ப முடியாமல் கேட்டனர் இருவரும். 

‘’உலக நாடுகளோட பல பெண் தலைவர்கள் இங்க வராங்களே அவங்க யாரும் கோல்டு அணியறது இல்லை . நீங்க பாத்திருக்கலாம்’’ என்றேன். இருவரும் ‘’ஆமாம் சார்’’ என்றனர். 

‘’நம்ம நாட்டுல தான் சாமானியமான ஏழைக் குடும்பத்துக்குக் கூட 5 பவுன் தங்க நகை இருக்கும். 140 கோடி நம்ம பாபுலேஷன். அப்பன்னா இங்க 28 கோடி குடும்பம் இருக்குன்னா நம்ம கிட்ட இருக்கற மினிமம் தங்கம் 140 கோடி பவுன். அவ்வளவு தங்கம் அமெரிக்கா கிட்ட கூட கிடையாது.’’ 

‘’நாம அவ்வளவு பணக்கார நாடா சார்?’’

‘’நிச்சயமா! நாளைக்கே நம்ம அரசாங்கம் மக்கள் கிட்ட இருந்து தங்கத்தை வாங்கிட்டு ரொக்கமா பணம் கொடுத்தா உலகத்துல நம்ம கையில தான் கோல்டு அதிகமா இருக்கும். மத்த நாடுகள் காசு செலவு செஞ்சு சுரங்கத்துல இருந்து தங்க தாது எடுத்து அதை தங்கமாக்கனும். நமக்கு நம்ம கையிலயே இருக்கு. செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாம். உலகத்துல தங்கத்தோட விலை என்னவா இருக்கணும்ங்கறத நாம தான் தீர்மானிப்போம்‘’

’’விஸ்வகர்மா 4 தொழில் செய்யறவங்க சேர்ந்து இருக்கற ஜாதி சார். நாங்க பொன் நகை செய்யறவங்க. இரும்பு தளவாடங்கள் செய்ர ஜாதியும் இதுல சேந்தது. பாத்திரம் செய்யறவங்க. தச்சு வேலை செய்யறவங்க. ’’

’’மத்திய அரசாங்கத்துல இப்ப விஸ்வகர்மா யோஜனா ன்னு ஒரு ஸ்கீம் இருக்கு. மத்திய அரசாங்கம் அதுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கியிருக்கு. இந்த 4 தொழிலோட மேல பல தொழில் சேத்து இருக்காங்க. அவங்களோட தொழிலுக்கு உபயோகமா இருக்கற விதமா அவங்களுக்கு லோன் கொடுங்க’’

‘’விஸ்வகர்மா ஸ்கீம்ல கவர் ஆகறவங்க யாருன்னு பாத்து மேனேஜர் கிட்ட ரெஃபர் பண்றோம் சார்’’ என்றனர் மகிழ்ச்சியுடன். 

மேலாளர் கஜானாவிலிருந்து நகையைக் கொண்டு வந்து கொடுத்தார். நாங்கள் பெற்றுக் கொண்டு எல்லாருக்கும் நன்றி சொல்லி கிளம்பினோம்.