Saturday 10 February 2024

நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்

அடிப்படையில் நான் ஜனநாயக வழிமுறைகளின் மீதும் அரசு அமைப்பின் மீதும் நம்பிக்கை கொண்டவன். மத்திய மாநில அரசுகள் இந்திய அரசியல் சாசனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வழிமுறைகளின் படியே இயங்க முடியும் என்பதை அறிந்தவன். இந்திய ஜனநாயகம் என்பது அளவில் மிகப் பெரியது; எனவே ஆயிரக்கணக்கானோர் இயங்கும் போது முரண்கள் உருவாவது இயல்பு. அவை இந்திய அரசியல் சட்டத்தின் படி தீர்வு காணப்பட வேண்டும் என்ற புரிதலும் எனக்கு உண்டு. 

அரசியலில் ஆட்சி அதிகாரத்தில் நூற்றுக்கணக்கான கொள்கைகளும் எண்ண மாறுபாடுகளும் இருக்கும். அது இயல்பு. எனினும் எந்த அரசும் பொது மக்களின் பொது அமைதிக்கு இடையூறு செய்யும் நிகழ்வுகளை எவ்விதம் கையாள்கின்றன என்பதை ஒரு சாமானியக் குடிமகனாக நான் கவனிப்பேன். அரசு குறைந்தபட்சம் உறுதி செய்ய வேண்டிய விஷயம் பொது அமைதி. இன்றைய தேதிக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை என்பது ஒரு யதார்த்த நிலை.