தமிழகத்தில் திராவிடக் கட்சிகளும் கம்யூனிஸ்டுகளும் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்துக்கு முன்பிருந்தே மக்கள் மனத்தில் நச்சைப் பரப்பியவர்கள் என்ற வலுவான எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. தமிழகத்தில் வாழும் மக்களுக்கு சக குடிகள் மேல் நம்பிக்கையின்மையும் ஐயமும் அச்சமும் உண்டாக திராவிட இயக்கமே காரணம் என்பது எனது அவதானம். இந்தியாவில் இந்திரா காந்தி காங்கிரஸின் கொள்கைகளை வடிவமைக்கும் பொறுப்புகளில் மார்க்சிய சிந்தனை கொண்டவர்களை நியமித்தார். இந்தியா போன்ற நீண்ட பண்பாடு கொண்ட ஒரு நாட்டின் முக்கியக் கட்சியின் கொள்கைகளை மார்க்சிய சிந்தனை கொண்டவர்கள் நிர்ணயம் செய்ததே இன்றும் காங்கிரஸ் சந்திக்கும் அழிவுக்கான காரணம். இந்திரா அவ்விதமான நியமனங்களைச் செய்த பத்து ஆண்டுகளில் உலகில் சோவியத் யூனியன் என்ற நாடே சுக்கு நூறாக உடைந்து பொடிப் பொடி ஆனது. சோவியத் யூனியன் இல்லாமல் போன பின்னும் இன்னும் கம்யூனிச பொய்ப் பரப்புரை ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த நச்சுப் பரவலுக்கான முறிமருந்து இப்போதைய தேவை.