Friday 9 February 2024

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு

இன்று என் கண் எதிரில் ஒரு சம்பவம் நடந்தது. 

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ‘’சான்றிட்ட நகல் மனு’’ விண்ணப்பிக்க சென்றிருந்தேன். ஊரில் மக்கள் அதிகமாக புழங்கும் பகுதியில் பதிவு அலுவலகம் அமைந்துள்ளது. நீதிமன்றத்தை ஒட்டிய கட்டிடம் அந்த அலுவலகம். அதற்கு அடுத்த கட்டிடம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம். மேலும் பல அரசு அலுவலகங்கள் அந்த பகுதியில் அமைந்திருக்கின்றன. 

காலை 10 மணிக்கு பொதுமக்கள் பல்வேறு விதமான பத்திரப்பதிவு பணிகள் தொடர்பாக அலுவலகத்தில் குழுமியிருந்தனர். 

அப்போது 10 பேர் கொண்ட ஒரு கும்பல் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தது. அங்கிருந்த அரசு ஊழியர்களை அச்சுறுத்தியது. கடுமையான சத்தம் போடப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அலுவலக வாசலில் அந்த கும்பல் குழுமி நின்று அந்த அலுவலகத்தையே ஆக்கிரமித்திருந்தது. 

ஒரு அரசு அலுவலகத்தின் முன் இவ்வாறு ஒரு கும்பல் குழுமி பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கையில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கவனத்துக்கு இந்த விஷயம் அந்த அலுவலகத்தால் கொண்டு செல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் நிகழவில்லை. 

ஒரு மாவட்டத் தலைநகரில் மையப் பகுதியில் மாவட்ட அலுவலகம் ஒன்றில் ஒரு வன்முறைக் கும்பல் இவ்விதம் நடந்து கொள்வது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எந்த நிலைமையில் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.