Sunday 14 April 2024

புத்தாண்டு தினத்தில்

இன்று காலை அமெரிக்காவிலிருந்து நண்பர் அழைத்திருந்தார். நமது தளத்தின் பதிவுகளை வாசிப்பது தினமும் உரையாடலில் இருக்கும் உணர்வைத் தரக்கூடியது ; கடந்த சில நாட்களாக புதிய பதிவு இல்லாததால் ஃபோனில் அழைத்தேன் என்று கூறினார். இந்த பிரியங்கள் தான் என்னை எழுத வைக்கின்றன. புதிய ஆண்டில் நண்பருடன் உரையாடியது உற்சாகமான துவக்கமாக அமைந்தது. 

தொழில் நிமித்தமாக வடலூர் அருகே உள்ள நண்பரை சந்திக்கச் சென்றேன். மயிலாடுதுறை - சிதம்பரம் சாலை என்பது நம்ப முடியாத அளவுக்கு மாற்றம் கண்டுள்ளது. மிக பிரும்மாண்டமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. வளைவுகள் அனைத்தும் நேராக்கப் பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் ஒரு புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுக்கு ஜி.எஸ்.டி மூலம் கிடைத்த வருவாயே இந்த மாற்றத்துக்குக் காரணம். ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் உறுதி காட்டிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பாராட்டுக்குரியது. 

வடலூர் செல்லும் வழியில் புவனகிரியில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி ஆலயத்துக்குச் சென்று சுவாமியை வழிபட்டேன். வருடத்தின் முதல் நாளில் சுவாமி சன்னிதானத்தில் இருந்தது மனதுக்கு அமைதியாக உணர வைத்தது. 

நண்பரை அவருடைய வீட்டில் சந்தித்தேன். ஒரு மணி நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். நண்பர் மிக இனிய மனிதர். 

வடலூர் அருகே இருக்கும் சித்தப்பா வீட்டுக்குச் சென்றிருந்தேன். சித்தப்பா வீடு மிக அமைதியானது. வீட்டைச் சுற்றி பலவிதமான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இரண்டு நாட்கள் இங்கே வந்து முழுமையாக தங்கியிருக்க வேண்டும் என எண்ணினேன். சித்தப்பா வீட்டுக்கு அருகே ஒரு குளம் உள்ளது. அந்த குளக்கரையில் நடுவதற்கு 6 ஆல மரக் கன்றும் 6 அரச மரக் கன்றும் வாங்கிக் கொண்டு அடுத்த வாரம் வருவதாக் கூறி விடை பெற்றுக் கொண்டேன். சுவையான மதிய உணவை சித்தி அளித்திருந்தார்கள். 

புதிய ஆண்டின் முதல் தினம் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருந்தது. 

இரவு 7 மணி அளவில் வீடு திரும்பினேன்.