Friday 19 April 2024

ஓட்டு

 

இன்று காலை வழக்கமாக எழும் நேரத்துக்கு சற்று முன்னதாகவே எழுந்து விட்டேன். காலையிலேயே குளித்துத் தயாரானேன். திருச்சிற்றம்பலம் சொல்லி மூன்று முறை , திருஞானசம்பந்தர் அருளிய ‘’கோளறு பதிகம்’’ படித்தேன். ஊரும் நாடும் உலகமும் நலமடைய தமிழ்க் குழந்தை சம்பந்தர் இயற்றிய பதிகம்.

தேனமர் பொழில்கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் திகழ

நான்முகன் ஆதியாய பிரம்மா புரத்து மறைஞான ஞான முனிவன்

தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்

ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

என்பது சம்பந்தர் சொல். 

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் இன்று தொடங்குகிறது. ஒரு கணம் இந்தியப் பெருநிலத்தினை நினைத்துப் பார்த்தால் இந்த நடைமுறையின் பிரம்மாண்டம் புரியும்.

வீட்டிலிருந்து வாக்குச் சாவடி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. வாக்குச் சாவடிக்கு நடந்து சென்றேன். ஏன் என்று தெரியவில்லை. நடந்து செல்ல வேண்டும் என்று தோன்றியது. நடந்து செல்கையில் இதுவரை வாக்களித்த தேர்தல்கள் நினைவுக்கு வந்தன. அவற்றை எண்ணிய வண்ணம் சென்றேன். சாவடியை அடைந்த போது நேரம் 7.02. எனக்கு முன் ஒருவர் வாக்களிக்க தயாராக நின்றிருந்தார். சாவடியின் முதல் வாக்கை அவர் செலுத்தினார். இரண்டாவதாக நான் வாக்களித்தேன். 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் லட்சக்கணக்கான பணியாளர்கள் இந்த ஒரு நாளுக்காக பல நாள் தயாரிப்புடன் பணி புரிகிறார்கள். பொதுமக்கள் அதிக அளவில் வாக்களிப்பதே அவர்கள் பணிக்கு அளிக்கப்படும் மரியாதை. 

காலை 7 மணிக்கே வெயில் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. பகல் பொழுதில் இன்னும் உக்கிரமாக இருக்கக்கூடும். காலை நேரத்தில் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்தால் வாக்குப் பதிவு சதவீதம் அதிகம் இருக்கும்.