Tuesday 23 April 2024

சித்திரை முழுநிலவு

 

இன்று சித்திரை முழுநிலவு நாள். காவிரிப்பூம்பட்டினக் கடற்கரைக்கு இன்று மாலை சென்றிருந்தேன். ஸ்ரீ ராம நவமி அன்று கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த திருவழுந்தூர் செல்ல வாய்த்தது. இன்று சிலப்பதிகாரக் காவியத்தின் தலைவி கண்ணகியின் மண்ணில் இருக்க முடிந்தது. கடலுக்கு மேல் முழு நிலவு எழுந்திருந்தது. கரையில் நூற்றுக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். சித்திரை முழுநிலவு அன்று பூம்புகாரில் நடக்கும் இந்திர விழா சிலம்பில் மிக முக்கியமான ஒரு இடம். கண்ணகி நிறைநிலை எய்தியதும் சித்திரை முழுநிலவு நாளில். சித்திரை முழுநிலவு எப்போதும் சிலம்புடனும் கண்ணகி நினைவுடனும் இணைந்தது. பாரதி யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் கண்டதில்லை என்கிறான். கம்பன் பிறந்த மண்ணிலும் இளங்கோ காவியம் நிகழ்ந்த மண்ணிலும் வாழ நேர்ந்தது எனது நல்லூழ் என்றே எண்ணுகிறேன்.