எண்ணிப் பார்க்கையில் ஒரு மரம் என்பதே மிக பிரும்மாண்டமானது; அளவில் மட்டுமல்ல ; அதன் தன்மையில்; செயல்பாடுகளில் என எல்லா விதங்களிலும் அது பிரும்மாண்டமானதும் பிரமிக்கத்தக்கதும் ஆகும். மண்ணுக்கு அடியில் வேரூன்றியிருக்கிறது மரம். மண்ணில் இருந்து நீரையும் சத்துக்களையும் மரத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்கும் கொண்டு செல்கிறது. நீண்ட ஒரு மரத்தைத் தாங்குவதற்கான அற்புதமான வலிமையை விதையிலிருந்தே உருவாக்கிக் கொண்டு வளர்கிறது. இலைகள் ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகின்றன. கனிகளும் காய்களும் இலைகளும் உணவாகவும் மருந்தாகவும் பயன் தருகின்றன. ஆயிரக்கணக்கான பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் வாழிடமாய் மரம் இருக்கிறது. மரம் ஒரு அற்புதம்.
மரம் ஒரு அற்புதம் எனில் காடு என்பது பேரற்புதம். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மரங்களும் செடி கொடிகளும் இணைந்துள்ள காடு ஒரே உயிராக ஐக்கியம் கொள்கிறது. சில கணங்கள் காட்டுக்குச் செல்லும் எவரும் கூட அந்த ஐக்கிய உணர்வை அனுபவபூர்வமாக உணர முடியும்.
மழைக்காடுகள் உலகம் மானுடர்க்கு அளித்திருக்கும் கொடை. அவற்றிலிருந்தே நதிகள் உற்பத்தியாகி நெடுந்தொலைவு பயணிக்கின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றன.
எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் குறிப்பிடத் தகுந்த சில மழைக்காடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இன்றும் அந்த காடுகளை எண்ணும் போது என் அகம் அவற்றை வணங்குகிறது. வணக்கம் என்ற உணர்வுடனேயே அந்த காடுகளை எண்ணிப் பார்க்க முடியும். அத்தனை பவித்ரமும் புனிதமும் கொண்டவை அவை.
கருநாட்கத்தில் கண்ட குதிரைமுகே, ஆகும்பே ஆகிய மழைக்காடுகள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன. சிருங்கேரி ஆகும்பே மழைக்காட்டின் ஒரு பகுதியாகும்.