Friday 21 June 2024

இல்லாமல் போன தார்மீகம்

கடந்த 20 ஆண்டுகளில் உலகில் பல நாடுகளில் வறுமை என்பது பெருமளவு குறைந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக அதற்கு பல காரணங்கள். உலகில் உணவு தானிய உற்பத்தி தேவையின் அளவை எட்டியிருப்பது அதற்கு முக்கிய காரணம். நமது நாட்டிலும் தமிழகத்திலும் வறுமை பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது.   

இருபதாம் நூற்றாண்டில் உலகம் ஏகாதிபத்திய சக்திகளின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தன. அடிமைப்படுத்தி பொருளியலை சுரண்டிய நாடுகள் ஒரு பக்கம் அடிமைப்பட்டு சுரண்டலுக்கு உள்ளான நாடுகள் இன்னொரு பக்கம் என உலகின் நிலை இருந்தது. ஐம்பது ஆண்டுகளில் காலனியாக இருந்த நாடுகள் தங்கள் பொருளியல் நிலையில் மீண்டு வந்தன. அந்த காலகட்டத்தில் அரசியல் என்பது வறுமை கொண்டிருக்கும் சமூகத்துக்கு வறுமையிலிருந்து மீட்பு அளிக்கும் ஒன்றாகவும் அரசின் செயல்பாடு என்பது வறுமையில் இருக்கும் மக்களை வழிநடத்தும் விதமாகவும் இருந்தது. 

இருபத்து ஓராம் நூற்றாண்டில் தமிழகத்தில் பல காரணங்களால் வறுமை மெல்ல நீங்கத் தொடங்கியது. மக்கள் உணவுப்பஞ்சம் நீங்கி வாழத் தொடங்கினர். இன்று அனேகமாக உணவுப்பஞ்சம் இல்லை. 

மக்கள் சமூகங்களின் மனநிலை ஒரு முனையிலிருந்து அதன் நேர் எதிர் முனை நோக்கி செல்லும் இயல்புடையது. ஆஸ்திரேலியாவில் உணவுப்பஞ்சம் இல்லை. ஆனால் ஆஸ்திரேலியர்கள் உடல் பருமன் நோய்மைக்கு ஆளாயினர். இன்று உலகிலேயே மிகை உடல் பருமன் கொண்ட தேசம் ஆஸ்திரேலியா. ஒரு நாளில் பல வேளைகள் பல விதமான உணவை உண்டு கொண்டேயிருப்பதும் கொழுப்புச்சத்து மிகுந்த உணவை அதிக அளவு உண்பதும் அந்த தேசத்தினரின் சிக்கல்கள். 

அதே அளவுகோலில், உணவுப் பஞ்சத்திலிருந்து நீங்கிய தமிழ்ச் சமூகம் இன்று மது அடிமைகளாக மாறியிருக்கிறது. தமிழக மக்கள் தொகை ஏழு கோடி எனில் அதில் பெண்கள் குழந்தைகள் 70 சதவீதம் எனில் மீதமுள்ள 2.8 கோடி ஆண்களில் பாதிக்குப் பாதி பேர் குடி அடிமைகளாக இருப்பார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமே தவிர குறைவாக இருக்க வாய்ப்பில்லை.   

தமிழக அரசு கடந்த 20 ஆண்டுகளாகவே மது வருமானத்தால் இயங்கக் கூடிய நிலைக்கு வந்து விட்டது. திராவிடக் கட்சிகள் மக்களைப் பழக்கியிருக்கும் பாப்புலிச அரசியல் மாநில அரசின் வருவாயை வேறு விதங்களில் பெருக்க சாத்தியமில்லாமல் ஆக்கியிருக்கிறது. ஏழு கோடி மக்கள் புழங்கும் மின்சாரம் பல்வேறு விதமான இலவசத் திட்டங்களால் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மாநில நிர்வாகத்துக்கு மாத சம்பளம் கொடுக்கவே மது விற்பனை மூலம் வரும் வருவாய் தேவை என்ற நிலை உள்ளது. எந்தெத்த விதங்களில் எல்லாம் மதுவை வளர்க்க முடியுமோ காக்க முடியுமோ அத்தனை விதங்களிலும் தமிழகத்தில் அரசால் மது வளர்க்கப்படுகிறது ; காக்கப்படுகிறது. 

எந்த சமூகத்திலும் மது தொடர்புடைய நபர்களே சமூகத்தின் பெரும்பான்மையான குற்றச் செயல்களுக்கு காரணமாக இருப்பார்கள். இன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலை அதுவே. திருட்டு, வழிப்பறி, கொலை, ஆள் கடத்தல் என பல செயல்களை மதுவுடன் தொடர்புடைய ஆட்களே முன்னெடுக்கின்றனர். மாநில காவல்துறை இவை அனைத்தையும் கண்கூடாகக் கண்டும் இவற்றைத் தடுத்து நிறுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது. 

வறுமை நீங்கிய சமூகத்தில் பொருளியல் மேம்படும். பொருளியல் மேம்படும் சமூகத்தை வழிநடத்தும் பாணிகள் பிரத்யேகமானவை. வறுமை நீங்கிய சமூகத்தில் தனி மனிதன் - தனி மனித உரிமைகள் ஆகியவை முதன்மை பெறும். அதே நேரம் தனி மனித கடமைகளும் உண்டு. திராவிடக் கட்சிகள் வறுமை நீங்கி பொருளியல் நிலை மேம்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தை பொருளியல் ரீதியாக சுரண்டுகின்றன. தமிழ்ச் சமூகம் அதை உணரும் நிலையில் இல்லை. 

தமிழகத்தின் ஆளும் கட்சித் தலைமையும் அதிகார வர்க்கமும் குடிப்பழக்கம் என்பதை தனிமனிதனின் விருப்பம் உரிமை என்று எளிதில் கடந்து செல்லக் கூடும். 

எந்த நாகரிக ஆட்சியாளனும் சமூகத்தின் சட்டம் - ஒழுங்கை நல்ல முறையில் பராமரிக்க தேவையானதை செய்வான். அந்த தார்மீகப் பொறுப்பை உணர்ந்திருப்பான். 

இன்று தமிழகத்தில் எந்த தார்மீகமும் இல்லாமல் போயிருக்கிறது.