Thursday, 20 June 2024

சாராய அரசு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணித்துள்ளனர். 

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசு விற்கும் சாராயம் கோடிக்கணக்கான குடி அடிமைகளை உருவாக்கியிருக்கிறது. சாமானிய ஏழை நடுத்தர மக்களின் உழைப்புக்கான ஊதியம் தினமும் அவர்களால் டாஸ்மாக் மதுவை வாங்க செலவு செய்யப்படுகிறது.  டாஸ்மாக்குக்கு மது சப்ளை செய்யும் மது ஆலை வைத்திருப்பவர்கள் ஆளும்கட்சிக்காரர்கள். மது உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் 900 சதவீதம் லாபம் அடைகிறார்கள். இந்த பெரும்பணம் வேறு வேறு தொழில்களில் முதலீடாகி அதன் மூலமும் லாபம் சம்பாதிக்கின்றனர். தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அளிக்கும் பணமும் மேற்கூறிய வழியில் திரட்டப்படுவதே. 

இன்று தமிழகத்தின் முக்கியமான தொழில்களை இந்த சாராய பணமே கட்டுப்படுத்துகிறது என்பதே யதார்த்தம். 

டாஸ்மாக்கால் மது ஆறு தமிழகத்தில் நித்தம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்க கள்ளக்குறிச்சியில் அதையும் தாண்டி கள்ளச்சாராயம் விற்கப்பட்டிருக்கிறது என்பது தமிழகம் எவ்வளவு மதுவின் பிடியில் இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது. 

இன்று மக்களின் வறுமை மறைந்திருக்கிறது. பசி என்பது இல்லை. உணவுப் பஞ்சம் இல்லாத சமூகத்தின் மக்களுக்கு மதுவைத் திறந்து விட்டு அதன் மூலம் லாபம் சம்பாதித்து அந்த மக்களை நோய்மைக்கும் மரணத்துக்கும் தள்ளியிருக்கின்றன தமிழகத்தை ஆண்ட ஆளும் கட்சிகள். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் சாராய அரசு ஏற்படுத்தியிருக்கும் சாராய மரணங்கள்.