Wednesday 19 June 2024

ஒரு வானொலிச் செய்தி

 இது நடந்தது 1995ம் ஆண்டு. 


1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அயோத்தியில் பாபர் கும்மட்டம் அங்கு திரண்டிருந்த கரசேவகர்களால் தகர்க்கப்பட்டது. பாபர் கும்மட்டம் தகர்க்கப்பட்ட அன்றே அச்சம்பவம் நிகழ்ந்த பின் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஆட்சி புரிந்த பாரதிய ஜனதா அரசுகள் கலைக்கப்பட்டு அந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. சில மாதங்களில் அங்கே நடந்த தேர்தலில் ஹிமாச்சலிலும் மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசு அமைந்தது. ராஜஸ்தானில் வென்ற பாரதிய ஜனதா உத்திரப் பிரதேசத்தில் சட்டசபையில் தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்தது. எனினும் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தன. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க சமாஜ்வாடி கட்சி ஆட்சி அமைத்தது. 

1995ம் ஆண்டு மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்தது. நான் அந்த மாநிலத்தின் தேர்தல் நிலவரங்களை செய்தித்தாள் செய்திகளிலும் இதழ்களிலும் கவனித்து வந்தேன். இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எனவே வழக்கமான எதிர்பார்த்த முடிவாகவே இருக்கும் என பொது எதிர்பார்ப்பு இருந்தது. இந்த மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்ற கணிப்பு எனக்கு இருந்தது. 

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினம். பள்ளி முடிந்து வந்து மாலை 6.30 மாநிலச் செய்திகளில் குஜராத் , மகாராஷ்ட்ரா தேர்தல் முடிவுகள் கூறப்படுகிறதா என்று பார்த்தேன். மாநிலச் செய்திகள் என்பதால் தேர்தல் முடிவுகள் குறித்து எந்த செய்தியும் இல்லை. 7.15க்கு ஆர்வத்துடன் தில்லி செய்திகள் கேட்க வானொலியை டியூன் செய்தேன். வீட்டில் அனைவரும் ‘’என்ன இன்னைக்கு ரொம்ப ஆர்வமா நியூஸ் கேக்கற’’ என்று கேட்டார்கள். குஜராத் , மகாராஷ்ட்ரா எலெக்‌ஷன் ரிசல்ட் என்றேன். அனைவரும் காங்கிரஸ்தான் ஜெயிக்கும் என்றார்கள். ‘’இந்தியா டுடே’’ பி.ஜே.பி க்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லியிருக்கு என்றேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும் என்று சொன்னார்கள் வீட்டில் இருந்தோர். 

குஜராத்தில் பாரதிய ஜனதா அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. மகாராஷ்ட்ராவில் சிவசேனா - பா.ஜ. க கூட்டணி ஆட்சி அமைத்தது . இந்த செய்தி இரவு 7.15 தில்லி செய்திகளில் முதல் முறையாக ஒலிபரப்பானது. 

இன்று ஒரு மாநிலத் தேர்தல் முடிவு தெரிய மாலை 7.15 தில்லி செய்திகள் கேட்டால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதைப் பலரால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. 

மறுநாள் அனைத்து தமிழ் ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும் குஜராத் , மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க வென்றதே தலைப்புச் செய்தி. 

சில நாட்கள் கழித்து வெளியான ‘’இந்தியா டுடே’’ அட்டைப்படக் கட்டுரையாக ‘’காவிப்படை உயிர்த்தெழுந்தது’’ என்ற செய்திக் கட்டுரையை வெளியிட்டது.