Tuesday 25 June 2024

பெருக்கெடுக்கும் மது - தமிழ்ச் சூழலின் அவலம்

ஒரு கிராமத்தில் சராசரியாக ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஆயிரம் குடும்பங்கள் உள்ள ஒரு கிராமத்தின் மக்கள்தொகை சராசரியாக ஐயாயிரம் இருக்கும். அந்த ஐயாயிரம் பேரில் பெண்கள் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் இருப்பார்கள். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் ஐந்நூறு பேர் இருப்பார்கள் எனக் கொள்ளலாம். 2500 பெண்கள் 500 சிறுவர் சிறுமியர் போக மீதி உள்ள 2000 பேர் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள். 

ஒரு கிராமத்தின் சராசரியான இந்த 2000 ஆண்களே கிராமத்தின் பொருளியல் உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை அளிக்கக்கூடியவர்கள். கிராமத்தின் பொது காரியங்களை பெருமளவு முன்னெடுப்பவர்கள். இன்றைய தமிழக யதார்த்தம் என்பது இந்த 2000 பேரில் 1800 பேர் குடி அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதே. இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. 

குடிப்பழக்கம் ஆதி காலம் முதல் இருந்திருக்கிறது. என்றாலும் என்ன விதமான மது அருந்தப்பட்டிருக்கிறது அது உடலுக்கும் மனதுக்கும் அளிக்கும் தீமைகள் எவ்விதமானவை என்பதும் கருதப்பட வேண்டியவை. ஆதி காலம் முதல் பனங்கள்ளும் தென்னங்கள்ளும் மதுவாக அருந்தப்பட்டிருக்கின்றன. 

இப்போது சாராயம் மதுவாக புழக்கத்தில் உள்ளது. தீய பயத்தலில் கள் 1 எனில் சாராயம் 100 எனக் கூறத் தக்கது. கள்ளச்சாராயம் 1000 எனக் கூறத் தக்கது. 

ஒரு ஊரில் இருக்கும் 2000 ஆண்களில் 500 பேர் குடி பழக்கம் கொண்டவர்கள் எனில் அந்த ஊரின் நிலை ஒரு விதமாயிருக்கும். 1000 பேர் குடி பழக்கம் கொண்டவர்கள் எனில் அந்த ஊரின் நிலை வேறுவிதமாய் 500 பேர் குடிப்பழக்கம் கொண்ட நிலையை விட இரு மடங்கல்ல மேலும் பல மடங்கு பாதிப்புடன் இருக்கும். இன்றைய நிலை ஒரு கிராமத்தில் 90 சதவீதம் ஆண்கள் குடி அடிமைகளாக இருக்கிறார்கள் என்னும் நிலை உள்ளது. 

தமிழகத்தின் எதார்த்தம் என்னவெனில் குடிகாரர்களே மதுக்கடைகள் குறைவாக இருந்தால் தங்கள் குடிப்பழக்கம் குறையும் என நினைக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக மதுக்கடைகள் இருக்குமானால் தாங்கள் மது அருந்துவது குறையக்கூடும் என்பது அவர்கள் விருப்பம். 

சாராயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இன்று தமிழ்ச் சூழலுக்கு உள்ளது.