Tuesday 25 June 2024

தாக்கப்பட்ட தேசம் - நெருக்கடி நிலைப் பிரகடனம்

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் அதிகார அடுக்கு பெரிதாக மாறியது. போரில் ஈடுபட்ட நாடுகள் பொருளியல் சரிவைச் சந்தித்தன.  யுத்தத்தில் மிகப் பிந்தி நுழைந்த அமெரிக்கா உலகின் பெரிய பொருளியல் சக்தியாக உருவானது. அதனை அடுத்து சோவியத் யூனியன் பெரிய பொருளியல் சக்தியானது. 

அமெரிக்கா - சோவியத் யூனியன் என்னும் இரு துருவ அரசியல் உலக அரசியலில் உண்டானது. இரண்டு நாடுகளும் தங்கள் முகாமுக்கு ஆள் சேர்த்தன. உலக நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுதல், தங்கள் வலுவான உளவு அமைப்புகள் மூலம் உலக நாடுகளின் அரசியல், பொருளியல், ராணுவச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளில் பல ஆண்டுகளாக இரு நாடுகளும் ஈடுபட்டு வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த பல யுத்தங்களுக்கு கலவரங்களுக்கு ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு இந்த ‘’பனிப்போர்’’ காரணமாக அமைந்தது என்பதே வரலாற்று உண்மை. 

சோவியத் யூனியன் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் எளிதில் கொண்டு வரலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் ஆட்சியாளர்கள் சோவியத் யூனியன் பாணி திட்டமிடுதல்களை அரசாங்கத்திலும் பொருளாதாரத்திலும் செயல்படுத்திக் கொண்டிருந்தது முக்கிய காரணம். அப்போது உலகில் கம்யூனிசம் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத உலகை உருவாக்கும் என்னும் நம்பிக்கை பரவலாக இருந்ததும் இன்னொரு காரணம். உலகெங்கும் கம்யூனிசம் பஞ்சம் , படுகொலை, பேரழிவு, யுத்தங்களை மட்டுமே உருவாக்கியிருக்கிறது என்னும் உண்மையை இரண்டாம் உலகப் போர் முடிந்து 40 ஆண்டுகளுக்குப் பின் சோவியத் யூனியன் சுக்கு நூறாக உடைந்த போதே உலகம் உணர்ந்தது. 

கட்சியில் தனது பிடி இளகத் தொடங்குவதைக் கண்ட இந்திரா காந்தியின் மனச்சாய்வு சோவியத் யூனியனின் பக்கம் முழுமையாகத் திரும்பியது. இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் சோவியத் யூனியனின் பங்கு இருந்திருக்கிறது என்னும் உண்மை பின்னாட்களில் மெல்ல வெளிவரலானது. வெளிநாட்டு தூண்டுதலுக்கு ஆட்பட்டு ஜூன் 25 1975ம் ஆண்டு இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். 

இந்திய அரசியல் சாசனம் முடக்கப்பட்டது. நீதிமன்றங்கள் அதிகாரமிழந்தன. பத்திரிக்கை சுததிரம் இல்லாமல் போனது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள் எனக் கருதப்பட்ட ஒவ்வொருவரும் நாடெங்கும் ஒவ்வொரு ஊரிலும் வேட்டையாடப்பட்டனர். எனினும் ஆட்சியாளர்கள் அறியாத ஒரு விஷயம் இருந்தது. 

அதாவது நம் மண்ணில் மக்களாட்சி மாண்புகள் என்பவை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இங்கே ஜனநாயகம் என்னும் உணர்வு சிறு சிறு குடிகளிடமும் சிறு சிறு குலங்களிடமும் இருந்து வந்துள்ளது. குடிகளையும் குலங்களையும் ஏதேனும் நியதிகள் கட்டுப்படுத்தியிருக்கின்றன. நியதிக்கு உட்படும் குலங்களும் குடிகளும் என்பதே இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு அம்சம் ஆகும். அடிப்படை நியதியில் இந்தியக் குலங்களையும் குடிகளையும் சமரசம் செய்ய வைக்க முடியாது. அவர்கள் பல நூற்றாண்டுகளாக பழகி வந்த உணர்வு அது. 

நாட்டு மக்கள் மௌனமாக இருந்தனர். நாடும் நாட்டின் ஜனநாயகமும் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்கள் தலைமறைவாக இருந்து நாட்டு மக்களைச் சந்தித்து ஆட்சியாளர்களின் அவலங்களை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர். நாட்டு மக்களின் மௌனத்தை தங்கள் செயல்பாடுகள் மீதான ஏற்பு என எண்ணிய ஆட்சியாளர்கள் இரண்டு ஆண்டுகளில் எமர்ஜென்சியை விளக்கி தேர்தலை அறிவித்தனர். 

பிரதமர் இந்திரா காந்தி தன் சொந்த தொகுதி ரே பரேலியில் பாரதிய லோக் தளம் வேட்பாளர் ராஜ் நாராயணிடம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் ஆட்சியிலிருந்து மக்களால் தூக்கியெறியப்பட்டது. நாட்டின் வாக்காளர்கள் ஜனதா கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். ஜனநாயகம் வென்றது. 

நெருக்கடி நிலையை முறியடிக்க இரண்டு ஆண்டுகளும் போராடியவர்களின் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும். 

ஜெய்ஹிந்த்