Thursday 27 June 2024

குரோதி

இந்திய மரபு காலத்தைக் கணக்கிட பல்வேறு விதமான கணிப்பு முறைகளைக் கொண்டிருக்கிறது. வானியலும் கணிதமும் இணைந்த பெரும் முறைகள் அவை. அவற்றின் பிரபலமான சில வழிமுறைகளே பொதுஜன அறிதலில் இருப்பது. இந்திய மரபு சூரியனைப் பிரதானமாகக் கொண்ட நாட்காட்டி முறையையும் சந்திரனைப் பிரதானமாகக் கொண்ட நாட்காட்டி முறையையும் கொண்டிருக்கிறது. அவற்றில் பொதுவான அம்சங்களும் உண்டு. வேறுபடும் அம்சங்களும் உண்டு. அவற்றை அளவுகோல்களாகக் கொண்டு ஒரு பொது முடிவு மேற்கொள்ளப்படுவதும் உண்டு.  

27 நட்சத்திரங்கள் என்பவை இந்திய நாட்காட்டிகளில் அடிப்படையானவை. இவற்றின் சுழற்சியில் 12 மாதங்கள் உண்டு. இந்திய மரபு காலத்தை ஒரு சுழற்சி எனக் கொள்கிறது. சுழற்சி அல்லது வட்டம். பூமி சூரியனைச் சுற்றி வருவதால் அளவிடப்படும் காலமும் ஒரு சுழற்சி அல்லது வட்டம் என உருவகிக்கப்படுகிறது. 27 நட்சத்திரங்கள் 12 மாதங்களைக் கொண்டு 60 வருடங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. பிரபவ , விபவ தொடங்கி அட்சய ஆண்டு வரை 60 ஆண்டுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெயரைக் கொண்டிருக்கிறது. 

ஒருவர் பிரபவ ஆண்டில் சித்திரை மாதம் முதல் நாளில் பிறக்கிறார் என வைத்துக் கொள்வோம். அன்று ஞாயிற்றுக்கிழமை பரணி நட்சத்திரம் எனில் 60 ஆண்டுகளுக்குப் பின் , சித்திரை மாத முதல் நாளும் ஞாயிற்றுக்கிழமை பரணி நட்சத்திரத்தில் அமையும். எனவே பிரபவ ஆண்டில் பிறந்த ஒருவர் அடுத்த பிரபவ ஆண்டைச் சந்திக்கும் போது அவருக்கு 60 வயது பூர்த்தியாகியிருக்கும். அவருக்கு 61 வயது நடக்கும். ஒரு முழு சுழற்சி முடிந்து மீண்டும் ஒரு புதிய சுழற்சி துவங்குவதால் அவர் வயதை ஒரு கோணத்தில் 61-60= 1 என்றும் கூற முடியும். ஒருவருக்கு 60 வயது பூர்த்தியானால் அதனால் தான் சஷ்டி யப்த பூர்த்தி கொண்டாடுகிறார்கள். 

மழை , காலநிலை, சமூக நிகழ்வுகள் ஆகியவையும் தோராயமாக ஏறக்குறைய ஒரே விதமாக இருக்கும் என்னும் கணிப்பு இந்திய வானியலுக்கு உண்டு. அவை கணிப்புகள் மட்டுமே. அவற்றைக் கொண்டு காலத்துக்கு தகுந்தவாறு முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். 

இப்போது குரோதி ஆண்டு நடக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன் குரோதி ஆண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சி என்ன என்று 1964ம் ஆண்டின் நிகழ்வுகளைக் கண்டேன். சுதந்திர இந்தியாவில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இருந்திருக்கிறது. தற்போது 2024ல் தற்போதைய பிரதமர் தலைமையிலான ஆட்சியும் மூன்றாம் பதவிக் காலத்தில் இருக்கிறது.