Monday 1 July 2024

தஞ்சை வெண்ணாறு தவநிலை

 ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பன்னிரண்டு ஆண்டுகள் தவமியற்றிய இடம் தஞ்சாவூரில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது. தவத்தை நிறைவு செய்து சுவாமிகள் தஞ்சையிலிருந்து புறப்பட்ட போது தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னன் சுவாமிகளிடம் இங்கேயே இருந்து தனது ராஜ்யத்தின் குடிகளைக் காத்து அருள வேண்டும் என வேண்டுகிறான். சுவாமிகள் தான் தவமியற்றிய இடத்தில் தனது சூட்சூம சரீரம் எப்போதும் இருக்கும் என்று கூறி புறப்படுகிறார். சில ஆண்டுகளுக்குப் பின் , தஞ்சையில் உணவுப் பஞ்சம் உருவாகிறது. அப்போது நாயக்க மன்னன் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடம் தனது குடிகளைக் காக்க பிராத்தனை செய்கிறான். மன்னனின் கனவில் தோன்றிய ஸ்ரீராகவேந்திரர் தான் தவம் செய்த இடத்தில் தனக்கு ஒரு அதிஷ்டானம் அமைக்குமாறு கூறுகிறார். அதிஷ்டானம் அமையும் இடத்தை எப்படி உறுதி செய்வது என மன்னன் கேட்க தான் தவம் செய்த இடத்துக்குச் சென்றால் தான் நாக ரூபத்தில் வந்து வழிகாட்டுவதாக சுவாமி சொல்கிறார். மன்னன் வெண்ணாற்றங்கரை தவநிலைக்குச் செல்கிறான். அங்கே ஒரு சர்ப்பம் மன்னன் கண்ணில் படுகிறது. அது குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கே அசைவின்றி இருக்கிறது. அதிஷ்டானம் அமைய வேண்டிய இடம் இதுவே என மன்னன் உறுதி செய்து கொள்கிறான். அங்கே ஒரு அதிஷ்டானம் அமைக்கப்படுகிறது. பொதுவாக அதிஷ்டானங்களில் கூர்ம பீடம் அமைப்பார்கள். கூர்மம் என்பது ஆமை. ஞானிகள் தங்கள் புலன்களை அடக்கியவர்கள் என்பதால் கூர்ம பீடம் அமைக்கப்படும். தஞ்சை வெண்ணாறு தவநிலையில் சுவாமி அளித்த குறிப்பின் படி  ஐந்து தலை கொண்ட சர்ப்ப பீடம் அமைக்கப்பட்டுள்ளது.  நாட்டின் பஞ்சம் அகல்கிறது. சுவாமிகள் இப்போதும் அங்கே தவம் செய்தவாறு பக்தர்களுக்கு அருளுகிறார்.