Friday 7 June 2024

தெலுங்கு தேசம்

ஆந்திரப் பிரதேசத்தில் 1982ம் ஆண்டில் இந்திரா காந்தி மூன்று முறை ஆந்திர காங்கிரஸ் முதல்வர்களை மாற்றினார். ஃபிப்ரவரி மாதம் அஞ்சையா மாற்றப்பட்டு பவனம் முதல்வர் ஆனார். ஆறு மாதம் கழித்து பவனம் மாற்றப்பட்டு கோட்லா முதல்வர் ஆனார். நான்கு கோடி ஆந்திரர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் முதல்வரை தில்லியிலிருந்து இந்திரா காந்தி சர்வாதிகாரமாக மாற்றுவதை ஆந்திரர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்று கூறி ஆந்திரர்களின் சுயமரியாதையைக் காக்க ‘’தெலுங்கு தேசம்’’ என்ற  கட்சியைத் தொடங்கினார் என். டி. ராம ராவ். கட்சி ஆரம்பித்த பத்தே மாதங்களில் 32 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தார். தன்னிடம் இருந்த பழைய ’’மேடடர்’’ வேனை சரி செய்து அந்த வேனிலேயே ஆந்திரப் பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களைச் சந்தித்தார். தனது பரப்புரை வாகனத்துக்கு ‘’சைதன்ய ரதம்’’ என்று பெயரிட்டார். பரந்து விரிந்த ஆந்திர மண்ணின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சைதன்ய ரதம் சென்றது.


 ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது அரசை அரசியல் சதிகள் மூலம் அகற்ற முனைந்தது இந்திரா சர்க்கார். ஜனநாயகத்தைக் காக்க விரும்பிய சக்திகளாலும் மக்களின் மகத்தான ஆதரவாலும் மீண்டும் முதல்வரானார் என்.டி.ஆர். 1984ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் நடந்த தேர்தலில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. எனினும் ஆந்திரப் பிரதேசத்தின் 42 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியப் பாராளுமன்றத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது தெலுங்கு தேசம் கட்சி.

1989ம் ஆண்டு போஃபர்ஸ் ஊழல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் சர்க்காருக்கு எதிராக உருவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘’தேசிய முன்னணி’’யின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது தெலுங்கு தேசம் கட்சி.