Wednesday 10 July 2024

வரிகள் / விளக்கங்கள் -2 ( கோடை இரவின் கனவு)

Full of vexation come i with complaint
Against my child, my daughter Hermia

ஈகஸ் தளபதி தீஸியஸிடம் கூறும் வரி இது. விரக்தியால் முழுமையாக நிரம்பியிருக்கும் தான் ஒரு புகாருடன் வந்திருப்பதாகக் கூறுகிறார். புகார் தன் குழந்தையைக் குறித்து என்கிறார். குழந்தை என ஈகஸ் குறிப்பிடுவது இளம்பெண் ஹெர்மியாவை. காதலின் ஆகப் பெரிய சிக்கல்களில் ஒன்று இது. பெற்றோர் ஓர் இளம்பெண்ணை குழந்தை என்றே காண்கின்றனர். உணர்கின்றனர். எனவே இளம்பெண் கொள்ளும் காதல் உணர்வுகளை குழந்தையின் உணர்வுகளாகவே கொள்கின்றனர். ஏற்க மறுக்கின்றனர். உலகின் பொதுவான நியதி அது. ஈகஸும் அதற்கு விதிவிலக்கல்ல.  

Thou thou Lysander thou hast given her rhymes 
And interchanged love tokens with my child

ஈகஸின் கூற்று இது. அவளுக்கு ‘’ரைம்’’களை அளித்தான் என்கிறார் ஈகஸ். ‘’ரைம்’’ குழந்தைகள் திரும்பத் திரும்ப பாடுவது. குழந்தைகளின் இயல்பு அது. ‘’ரைம்’’கள் குழந்தைகள் பாடும் விதத்தில் விரும்பும் விதத்தில் எளிதாக அமைக்கப்படுபவை. ஹெர்மியா லைசாண்டர் சொல்லித் தந்தவற்றை குழந்தை போல திரும்பத் திரும்ப சொல்கிறாள் என்கிறார் ஈகஸ். அன்பின் பரிசுகளை இருவரும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள் என ஈகஸ் சொல்லும் போது ஹெர்மியாவுக்கு லைசாண்டர் மேல் இருக்கும் காதல் அனைவருக்கும் புரிந்து விடுகிறது. ஈகஸைத் தவிர அனைவருக்கும். 

So is Lysander

ஈகஸ் டிமிட்ரியஸ் ஒரு கனவான் என பலவிதத்தில் கூறிய பின், தளபதி தீஸியஸ் டிமிட்ரியஸ் ஒரு கனவான் என மேலும் வழிமொழிந்த பின் ஹெர்மியாவிடம் என்ன சொல்கிறாய் என்று கேட்கிறார்கள். 

அவ்வளவு நேரம் பேசப்பட்ட அத்தனை வார்த்தைகளுக்கும் பின் ஒரு சிறு வாக்கியம் மட்டுமே ஹெர்மியா உச்சரிக்கிறாள். ‘’லைசாண்டரும் ஒரு கனவானே’’ என. இந்த ஒற்றை வாக்கியம் ஹெர்மியா எத்தனை தன் காதலில் உறுதியானவள் என்பதையும் அவளது அச்சமின்மையையும் எடுத்துக் காட்டுகிறது.