Monday 15 July 2024

வன வாழ்க்கை - அத்தியாயம் 3 - வாசிப்பு

ஒவ்வொரு மனிதனும் மாணவனே என்கிறார் தோரோ. உலகின் ஆன்ம ஒருமைப்பாடை உணர வேண்டிய மாணவர்கள் எல்லா மனிதர்களும் என்பது தோரோவின் எண்ணம். ஆன்மக் கல்வியில் இலக்கிய வாசிப்பு ஒரு குறிப்பிடத்தக்க பங்கினைக் கொண்டிருப்பதாக தோரோ கருதுகிறார். உலகின் செவ்விலக்கியங்களை வாசிக்க மனிதர்கள் பயில வேண்டும் என்கிறார் தோரோ. ஒவ்வொரு செவ்விலக்கியத்தையும் அது எழுதப்பட்டிருக்கும் மொழியிலேயே வாசிக்க செவ்விலக்கியம் எழுதப்பட்டிருக்கும் அத்தனை மொழிகளையும் அறிய வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் தோரோ. கவிதை என்பது கவிஞர்களால் எழுதப்பட்டு கவிஞர்களால் வாசிக்கப்படும் ஒரு தனிமொழி என்று கவிதையை மிகச் சிறப்பித்துக் கூறுகிறார்.  நாம் புழங்கும் மொழி நம் தாய் மொழி எனில் செவ்விலக்கியம் எழுதப்பட்டிருக்கும் மொழி நம் தந்தை மொழி என்கிறார் தோரோ.