Wednesday 17 July 2024

வாசக நண்பர்

 இன்று இரவு எனக்கு வந்திருந்த ஒரு வாசகர் கடிதத்தை மின்னஞ்சலில் கண்டேன். பின்னர் அந்த வாசகருடன் பேசினேன். ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். உரையாடல் எங்களை பல வருடம் பழகிய நண்பர்கள் போல் உணர வைத்தது. 

நண்பர் தனது பத்து வயதிலிருந்து நூல்களை வாசிக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன். நவீன இலக்கிய வாசிப்பும் கவிதை வாசிப்பும் தீவிரமாகக் கொண்டிருக்கிறார். 

கம்பன் மீதும் தீவிர ஆர்வம். பி.ஜி. கருத்திருமன் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூல் வழியே கம்பனுக்குள் பிரவேசித்திருக்கிறார். உ.வே.சா மீது பெரும் பிரியமும் மரியாதையும் கொண்டிருக்கிறார். என் சரித்திரம் நூலை தன் வாழ்வில் 150 முறையாவது வாசித்திருப்பேன் என்று சொன்னார். 

சமீபத்தில் வெளியான எனது சிறுகதையான ‘’சராசரிக்கும் கீழே’’ வாசித்து விட்டு அக்கதை குறித்து தனது அவதானம் ஒன்றைக் கூறினார். அவர் கூறியது மிக நுட்பமான அவதானம். 

நண்பரின் அறிமுகம் மிகவும் மகிழச் செய்தது.