கடலூரிலிருந்து இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன்.
ஒரு இளைஞன் ‘’லிஃப்ட்’’ கேட்டான்.
வண்டியில் ஏற்றிக் கொண்டேன். காரைக்காட்டில் இறங்கிக் கொள்வதாகச் சொன்னான்.
வழக்கம் போல சீரான வேகத்தில் - அதாவது மெதுவாக - சென்று கொண்டிருந்தேன்.
‘’அண்ணா! கொஞ்சம் ஸ்பீடா ஓட்டுங்க’’ என்றான் இளைஞன். அவன் இறைஞ்சும் குரலில் கூறியதால் நான் பதில் ஏதும் சொல்லவில்லை.
சற்று வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினேன்.
சில நிமிடங்களில் ’’அண்ணா ! நீங்க எந்த ஊர் வரைக்கும் போரீங்க?’’ என்றான்.
‘’சிதம்பரம்’’
‘’அப்ப நான் பெரியபட்டுல இறங்கிக்கறேன்’’
வண்டி சென்று கொண்டேயிருந்தது. வண்டி வேகத்தை அதிகப்படுத்துமாறு அவன் இறைஞ்சியது மனதில் இருந்ததால் ‘’ தம்பி ! வண்டியை நீ ஓட்டுறியா?’’ என்றேன்.
வாகன இயக்கம் அவன் கைக்கு மாறியது.
எடுத்த எடுப்பிலேயே அதிவேகம் எடுத்து விட்டான். வண்டி விர் விர் என வேகமாக சென்று கொண்டேயிருந்தது. ஒரு வண்டியை ஓவர்டேக் செய்தான். எதிர்ப்பக்கம் ஒரு கார். எதிர்திசையில் இரு வாகனங்களும் நெருங்குகின்றன. குறைந்த இடைவெளி மட்டுமே இருந்தது. அதில் புகுந்து ‘’கட்’’ அடித்து கடந்தான்.
‘’தம்பி ! நான் ஓட்டட்டுமா?’’ என்றேன்.
அவன் வாகனத்தைத் தரவில்லை. கிட்டத்தட்ட நான் ஓட்டும் வேகத்தில் வாகனத்தை இயக்கினான். அதாவது சீரான வேகத்தில். அதாவது மெதுவாக.