Tuesday 30 July 2024

பூந்தளிர்


 ஐந்து வயதிலிருந்து எனக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தது. அட்சரங்களை ஒவ்வொன்றாக சேர்த்து வாசிப்பதை ஆர்வத்தின் காரணமாக மிக விரைவில் பழகிக் கொண்டேன். வீட்டிற்கு காலை நேரத்தில் தினமணி வரும். தினமணியின் தலைப்புச் செய்திகள் அனைத்தையும் வாசிப்பேன். செய்தித்தாள் வந்ததும் முதலில் வாசிக்கும் நபர் வீட்டில் நான் தான். தினமணியில் ‘’தினமணி சுடர்’’  வாரம் ஒருமுறை வெளியாகும். அதனை ஆர்வமாக வாசிப்பேன். சிறுவர் இதழ்களான பூந்தளிர், கோகுலம் ஆகிய இரு இதழ்களும் அப்போது நான் கடைக்குச் சென்று நானே வாங்கி வருவேன். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது வழியில் இருக்கும் பத்திரிக்கை விற்பனை கடையில் பூந்தளிர் வந்து விட்டதா என்று அவ்வப்போது கேட்பேன். அதில் வாண்டுமாமா என்பவரின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். கபீஷ் என ஒரு படக்கதை வெளியாகும். அதனையும் விரும்பி வாசிப்பேன். சில ஆண்டுகளில் பூந்தளிர் பத்திரிக்கை நின்று போய் விட்டது என்று கூறினார்கள். சிறுவனான எனக்கு ஒரு பத்திரிக்கை ஏன் நின்று போக வேண்டும் என்பது புரியவேயில்லை.பூந்தளிரின் இடத்தை வேறு பத்திரிக்கையால் நிரப்ப முடியவில்லை. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பூந்தளிர் வாசித்திருப்பேன். 

பத்து வயதில் ‘’பொன்னியின் செல்வன்’’ வாசித்தேன். சோழ நிலமும் காவிரியும் அரசலாறும் மனதில் நிறையத் துவங்கின.