Wednesday 28 August 2024

அன்னை

குழந்தை தீர்த்தனின் குடும்பத்தினர் இன்று திருக்கருகாவூர் ஆலயத்துக்கு வந்து கரு காக்கும் அன்னையை வணங்கினர். அங்கே இருக்கும் நகரும் தொட்டிலில் அமர்ந்து கொண்டு அம்மையை சுற்றி வந்தான் திராத். நான்கு மாதக் குழந்தை. மனித முகங்களை ஆர்வமாகப் பார்க்கிறான். சூழலின் சப்தங்களை அவதானிக்கிறான்.  

நேற்று தீர்த்தனின் குடும்பத்தினர் காலை சென்னையில் புறப்பட்டு ரயிலில் ஸ்ரீரங்கம் வந்தனர். நேற்று காலையிலேயே ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ஸ்ரீரங்கநாதர் தரிசனம். தீர்த்தனின் எடைக்கு எடை கல்கண்டு துலாபாரம் அர்ப்பணித்தனர். தரிசனம் முடித்த பின்னர் மாலை கும்பகோணம் வந்தடைந்தனர். அங்கே தீர்த்தனின் அன்னையும் தந்தையும் தீர்த்தனுடம் விடுதி அறையில் ஓய்வெடுக்க மற்றவர்கள் சாரங்கபாணி, சக்கரபாணி ஆலயங்களுக்கு சென்று பெருமாளை வழிபட்டிருக்கின்றனர். 

இன்று காலை நான் ஊரிலிருந்து புறப்பட்டு திருக்கருகாவூர் சென்றேன். அவர்கள் எனது வருகைக்கு 30 நிமிடம் முன் ஆலயத்தில் இருந்தனர். நண்பனும் நானும் சில மாதங்கள் முன் அந்த ஆலயம் வந்ததையும் அம்மையிடம் வேண்டிக் கொண்டதையும் உணர்ச்சிகரமாக நினைத்துக் கொண்டோம். சன்னிதியில் பிள்ளை வரம் வேண்டி ஒரு குடும்பத்தினர் பிராத்தனை செய்து கொண்டிருந்தனர். 

அங்கிருந்து புறப்பட்டு பட்டீஸ்வரம் வந்தோம். துர்க்கை அம்மனை வணங்கினோம். 

ரயில் நிலையத்துக்கு மிக அருகில் இருக்கும் அறைக்கு வந்து சேர்ந்த போது சோழன் விரைவு வண்டியைப் பிடிக்க முழுதாக ஒரு மணி நேரம் இருந்தது. ரயில் நிலையத்தில் தீர்த்தன் குடும்பத்தினரை வழியனுப்பி விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்குக் கிளம்பினேன். 

தீர்த்தனின் அன்னையின் உணர்வும் மனமும் முழுமையாக தீர்த்தன் மீதேயிருந்தது. தீர்த்தனுக்காக அவர்கள் ஆற்றும் சிறு செயல் கூட முழுமை கொண்டிருந்தது. அன்னையின் பாதங்கள் மானுடரால் எப்போதும் வணங்கப்பட வேண்டியவை.