Wednesday 28 August 2024

தீர்த்தன் - அஞ்சனக் கருமுகில் கொழுந்து ( மறுபிரசுரம்)


சென்ற மாதம் என் சகோதரன் எனத்தக்க எனது நண்பன் சென்னையிலிருந்து திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகையை வணங்க வந்திருந்தான். நண்பனுடன் திருக்கருகாவூருக்கும் பட்டீஸ்வரத்துக்கும் சென்றிருந்தேன். 

இரண்டு தினங்களுக்கு முன்னால் சென்னையில் நண்பனின் மனைவிக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்து ஆண் மகவு பிறந்திருக்கிறது. அன்னையும் மகவும் நலமுடன் உள்ளனர். 

இன்று நண்பனிடம் பேசிக் கொண்டிருந்த போது குழந்தைக்குப் பெயர் முடிவு செய்திருக்கிறீர்களா என்று கேட்டேன். தீர்த்தன் என்ற பெயரின் மரூஉ ஆன ‘’திராத்’’ என்ற பெயரை சூட்ட உள்ளோம் என்று சொன்னான். 

நம் நாட்டில் காலை விழித்தெழுந்ததும் ‘’கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதா கோதாவரி ‘’ என்ற ஏழு புண்ணிய நதி தீர்த்தங்களை நினைத்து அவற்றின் பெயரைக் கூறி வணங்கும் மரபு இன்றும் உண்டு. குழந்தை திராத் பெயர் கூறி அழைக்கப்படும் போதெல்லாம் இந்த 7 புண்ணிய நதிகளின் பெயரையும் கூறும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. 

குழந்தை ஸ்ரீராமனின் பிறப்பை கம்பன் 
ஒரு பகல் உலகு எலாம்  உதரத்துள் பொதிந்து.
அரு மறைக்கு உணர்வு அரும் அவனை. அஞ்சனக்
கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதியை.
திரு உறப் பயந்தனள் - திறம் கொள் கோசலை.

என்கிறான்.