Friday 2 August 2024

ஒரு ரயில் நிலைய சந்திப்பு

 நண்பர் ஒருவர் இன்று மதியம் 2.30க்கு ஊருக்கு வருவதாகக் கூறியிருந்தார். அவருக்கு கும்பகோணத்தில் ஒரு வேலை. முடித்து விட்டு இங்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தார். கும்பகோணம் பணியில் எதிர்பாராத ஒரு மாற்றம். சற்று முன்னதாகவே ஊருக்கு வந்து விட்டார். மாயூரநாத சுவாமியையும் பரிமள ரங்கநாதரையும் சேவித்து விட்டு ரயில் நிலையம் சென்றடைந்திருக்கிறார். நான் மதியம் 1 மணி அளவில் அவருக்கு ஃபோன் செய்தேன். நண்பர் விபரம் சொன்னார். 15 நிமிடத்தில் ரயில் நிலையம் சென்று சேர்ந்தேன். நண்பரைச் சந்தித்தேன். நண்பருடன் அலைபேசி மூலம் உரையாடியிருக்கிறேன். நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. நண்பர் காலையில் ஒருமுறை அலைபேசியில் அழைத்திருக்கிறார். அழைப்பை எடுக்கத் தவறி விட்டேன். சற்று தாமதமாகத்தான் பார்த்தேன். இன்று வீட்டில் யாரும் இல்லை. எனவே ரயில் நிலைய கேண்டீனில் மதிய உணவு அருந்தினேன். ஆலய தரிசனம் முடித்து மதிய உணவு அருந்தி விட்டு நண்பர் ரயில் நிலையத்துக்கு வந்திருக்கிறார். எனவே அவரை ரயில் நிலைய பிளாட்ஃபார பெஞ்சில் அமரச் சொல்லி விட்டு நான் உணவருந்தச் சென்றேன். மதியம் 1.30லிருந்து மதியம் 3.10 வரை ரயில் நிலையத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். இன்று ஆடிவெள்ளி. நாளை ஆடிப்பெருக்கு. எனவே கோவை ஜன் சதாப்தி ரயிலில் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது. வழக்கமான நாள் எனில் கூட்டம் அள்ளும். நண்பரை ரயில் நிலையத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ரயில் நிலையத்தில் எத்தனை பேரை சந்தித்திருப்பேன். எத்தனை பேரை வழியனுப்பியிருப்பேன் என எண்ணிப் பார்த்தேன். பெரும் எண்ணிக்கை. மீண்டும் ஒரு சந்திப்பு. மீண்டும் ஒரு வழியனுப்பல்.