ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பது அந்த இருவரின் விஷயம். எனினும் நடைமுறையில் அது இருவரின் விஷயமாக மட்டும் புரிந்து கொள்ளப்படுவதில்லை : அந்த இருவராலும் கூட. இரண்டும் அல்லாத இன்னொரு அம்சம் அதில் இருப்பதாகவே எல்லாரும் நினைக்கிறார்கள். இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைப்பதே தேவன் தான் என்னும் நம்பிக்கை வலுவாகவும் பரவலாகவும் இருக்கிறது. ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் ஒருவன். அவளுக்கு முறைமாமன் ஒருவன் இருக்கிறான். பெண்ணின் காதலனுக்கு கள் வாங்கிக் கொடுத்து அவன் மயக்கத்தில் இருக்கும் போது ரயிலில் இருந்து ஆற்றில் தள்ளி விடுகிறான். ஆறு முழுவதும் வெள்ளம். எனினும் தள்ளி விடப்பட்ட பகுதியில் மட்டும் ஒரு சிறு மணல்மேடு இருந்திருக்கிறது. அதில் விழுந்து விட்டான். தண்ணீரில் விழுந்திருந்தால் கள் மயக்கத்தில் நீந்தியிருக்க முடியாது. உயிர் போயிருக்கும். மணல்மேட்டில் விழுந்ததால் அதிலேயே மயங்கிக் கிடக்கிறான். மது மயக்கம் தீர்ந்தவுடன் விழித்துப் பார்த்தால் சுற்றிலும் வெள்ளம். இருப்பினும் தன் உடல் வலுவால் நீந்தி கரையேறி இரண்டு நாட்களில் தன் ஊர் வந்து சேர்கிறான். தன் காதலியைக் காண வருகிறான். நீ உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பது ஆண்டவன் நினைத்தது என்கின்றனர் ஊர் மக்கள். ஆண்டவன் நினைத்தது தான் தன் காதலியைக் கைப்பிடிக்க வேண்டும் என்பதை என்கிறான் உயிர் பிழைத்து வந்தவன். தன் காதலால் ஆண்டவனை அறியும் ஆண்டவன் சித்தங்களைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு அதனைக் கண்டு புன்னகைக்கும் இடத்துக்கு அவன் வருகிறான் என்பதே தி.ஜா வின் ‘’ஆண்டவன் நினைத்தது’’ கதை.