ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது ஓர் இரவில். சஞ்சலமுற்ற ஒருவன் உறங்காமல் இருக்கிறான். அவனது தந்தை இறக்கும் தருவாயில் வீட்டில் எக்காரணம் கொண்டும் பாகப் பிரிவினை நிகழக் கூடாது எனக் கூறி விட்டு இறக்கிறார். தந்தை இறந்த சில மாதங்களில் சொத்தைப் பிரித்துக் கொடுக்க கேட்கிறான் தம்பி. மாலை இது தொடர்பான பேச்சைத் தொடங்கி விட்டு மறுநாள் பிரிவினையை நிகழ்த்தி விடலாம் எனக் கூறிச் சென்றிருக்கின்றனர் பஞ்சாயத்து பேச வந்தவர்கள். தந்தைக்கு கொடுத்த வாக்கு பொய்த்துப் போய் விடக் கூடாது என விசனப்படும் அண்ணன் உறக்கமற்ற இரவுக்குப் பின்னான கருக்கலில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கி விடுகிறான். ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் போது விழித்திருந்தவன் ஊர் விழிக்கும் நேரத்தில் நிரந்தரத் துயிலுக்குச் சென்று சேர்வதே தி.ஜா வின் ‘’தூக்கம்’’ கதை.