Saturday, 22 March 2025

மத்தகம்

 வனமொன்றில் கருவுற்றிருக்கும் பெண் யானை பெரும் பள்ளம் ஒன்றில் விழுகிறது. அந்த பள்ளத்திலேயே ஆண் யானைக்குட்டியை ஈன்று உயிர் நீக்கிறது. நாட்டின் இளவரசன் நோயுற்று சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறான். ஆண் யானை பிறந்த காடு இளவரசனின் ஆதுர சாலைக்கு அருகில் இருக்கிறது. ஆனையை மீட்கும் அரச படையினர்  அதனை இளவரசன் முன் கொண்டு வருகின்றனர். கண்டதும் இருவருக்குள்ளும் பிரியமும் நட்பும் மலர்கிறது. ஆனை இளவரசனின் ஆதுரசாலையில் செல்லக்குழந்தையாக கதலிப்பழமும் தேனும் தின்று வளர்கிறது. நாட்டில் இளவரசனுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதையைப் பெற்று வளர்கிறது. இளவரசன் விண்ணளந்தோனின் அடிமையாக ஆட்சி புரிபவன். ஆனையும் கேசவன் என்ற பெயரிடப்பட்டு ஆதி கேசவனை சுமக்கும் பணி பெற்று வாழ்கிறது. திருவட்டாரில் வசிக்கும் ஆனை ஒவ்வொரு மாத துவக்க நாளிலும் திருவனந்தபுரம் வர வேண்டும் என்பது இளவரசனின் விருப்பம். ஒவ்வொரு மாதமும் திருவட்டாரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அரசபவனியாக சென்று வருகிறது. ஒரு முறை ஆடி மாதத் தொடக்கத்தில் பேய் மழை.மலையாள நாட்டில் பேய்மழை பெய்து கொண்டிருக்கிறது. சங்கிலியிடப்பட்ட கேசவன் மாதத்தின் முதல் நாளை உய்த்தறிந்து காட்டாறுகள் பலவற்றைத் தாண்டி தன் நண்பனான இளவரசனைக் காண சென்று விடுகிறது. ஆனை தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் அவதானித்து அறிந்து உணர்ந்து இருக்கிறது. மகத்துவம் நிறைந்த அதனைச் சூழ்ந்தும் கீழ்மை கொண்ட மனங்கள் இருக்கின்றன. ராஜ்யத்தையும் கேடு சூழ்கிறது. இளவரசன் அரசனாகி நோயுறுகிறான். இந்த செய்தியை அறிந்து அதனை அரண்மனைக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கே ராஜ்யம் வெள்ளைக்காரர்களால் மேற்பார்வை செய்யப்படுகிறது. புதிய ராஜா பதவியேற்க இருக்கிறார். தன் அரசன் இப்போது இல்லை என கேசவனுக்குத் தெரிகிறது. திருவட்டார் வந்து விடுகிறது. மானுடக் கீழ்மை நிறைந்தவர்கள் தங்கள் உள்ளுறையை கேசவன் அறிவான் என எண்ணி அதனை நெருங்கவே அஞ்சிக் கொண்டிருந்தவர்கள் இறைவனும் அரசனும் மட்டுமே ஏறிய அதன் மத்தகத்தின் மீது ஏறுகிறார்கள். 

மத்தகம் - ஜெயமோகன்