சாரமான விஷயங்களில் ஈடுபாடு இல்லாத சாரமற்ற விஷயங்களில் அமிழ்ந்து கிடக்கும் ஒரு தஞ்சை ஜில்லா கிராமத்துக்கு ஒரு உபன்யாசகர் வந்து சேர்கிறார். ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம், வாலி வதம், இராவண வதம், பாதுகா பட்டாபிஷேகம் ஆகிய கதைகளை உபன்யாசமாக சொல்லக் கூடியவர். அந்த கிராமத்தின் பெரிய மனிதர்களை ஒரு கோடை நாளில் சந்திக்கிறார். கசப்பான அனுபவங்களே எஞ்சுகின்றன. வெறுமனே திரும்பப் போக விருப்பமின்றி ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாதுகா பட்டாபிஷேகம் சொல்லி விட்டு போக முடிவு செய்கிறார். கதையின் ஒரு பாதியைக் கூறி முடிக்கிறார். மீதிக் கதையை அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்கின்றனர். அடுத்த நாளுக்கு தள்ளி வைத்ததில் உபன்யாசகருக்கு ஒரு நன்மை நிகழ்கிறது. அது என்ன என்பதே தி.ஜா வின் ‘’கோயமுத்தூர் பவபூதி’’கதை.