அவன் அப்போது பிரி கே.ஜி சேர்ந்திருந்தான். இரண்டு வயது ஆறு மாதம். அவனை பள்ளியில் காலை கொண்டு போய் விடுவதும் மதியம் 12 மணிக்கு அழைத்து வருவதும் என் வேலை. இரு சக்கர வாகனத்தில் பயணிக்க அவனுக்கு மிகவும் ஆர்வம். பள்ளியின் அமைப்பும் இயங்குமுறையும் கிரமங்களும் அவனுக்கு ஆரம்ப நாட்களில் பிடிபடவில்லை. எனவே பள்ளி வளாகத்தைக் கண்டதுமே அழத் தொடங்குவான். அவ்வாறு அழுகையில் அவனை பள்ளியில் விட்டு விட்டு வர எனக்கும் வருத்தமாக இருக்கும். பிரி கே.ஜி வகுப்புக்கு ஓர் ஆசிரியை இருந்தார். யுவதியான அவர் பட்டம் பெற்று முதல் முறை ஆசிரியப் பணிக்கு வந்திருக்கிறார். அவருக்கு பிரி கே.ஜி வகுப்பு அளித்திருந்தனர். வகுப்பில் 20 குழந்தைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அழுது கொண்டிருக்கின்றன. நான் ஒருநாள் அவனை வகுப்பில் கொண்டு விடும் போது அந்த ஆசிரியை கேட்டார் : ‘’எல்லா குழந்தைகளும் அம்மாட்ட போகணும் ; அப்பாட்ட போகணும்னு அழறாங்க. இவன் மட்டும் வித்தியாசமா பிரபு மாமாட்ட போகணும்னு அழறான்’’ . மற்ற குழந்தைகளை அவர்களின் பெற்றோர் கொண்டு வந்து விடுகின்றனர். இவனை நான் கொண்டு வந்து விடுகிறேன்.