Wednesday, 30 July 2025

நீங்கள் செய்துள்ள செயல்கள் என்ன? (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருடைய தொழில் கட்டுமானம். அவரிடம் பணி புரிபவர்கள் திறன் மிக்கவர்கள். கடமை உணர்வு மிகுந்தவர்கள். எனினும் 40 பேர் வேலை பார்த்தால் 4 பேராவது கொஞ்சம் முன் பின் இருப்பார்கள் என்பது இயற்கை இல்லையா? பணியாளர்கள் எப்போதும் பணியாளர்களை ஏதேனும் விவகாரம் என்றால் தனித்து விட மாட்டார்கள். எந்த பணியாளரும் இன்னொரு பணியாளர் செயல்பாட்டின் மீது அதிருப்தி வெளிப்படும் போது அந்த சூழலை மௌனத்தின் மூலமே கடக்க விரும்புவார்கள். வாழ்க்கையின் விதவிதமான சூழல் பெருக்கில் தானும் இன்னொரு பணியாளர் இப்போது சிக்கியிருக்கும் சூழலுக்கு வரலாம் என்னும் வாய்ப்பால் அமைதியாகவே கடப்பார்கள்.  அமைப்பாளரின் பணிச்சூழலில் பெரும் நெருக்கடிகள் ஏதும் ஏற்பட்டதில்லை - கடவுள் புண்ணியத்தில். சிறு சிறு நெருக்கடிகள் வரும். பணியாளர்கள் சாவியை இடம் மாற்றி வைத்திருப்பார்கள். அல்லது தொலைத்திருப்பார்கள். இது அடிக்கடி நிகழும் என்பதால் பூட்டு எப்போதும் 50 ரூபாய்க்கு மட்டுமே போடப்பட்டிருக்கும். சாவி இல்லை என்றால் அந்த பூட்டை உடைத்துக் கொள்ளலாம். பூட்டை உடைத்த ஒரு மணி நேரத்தில் சாவி கிடைக்கும். இன்னொரு பணியாளர் சாவியை கண்டடைந்தால் அதனைக் கூற மாட்டார். பூட்டை உடைத்தாயிற்று ; இனி சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன என இருப்பார்கள். இது போல சிறு சிறு விஷயங்கள். எப்போதும் சிறு சிறு சிக்கல்கள் இருப்பது நல்லது. பெரிய சிக்கல் வராது. பணியாளர்கள் மௌனத்திலிருந்தும் சாதாரண உரையாடலிலிருந்தும் அவர்கள் எண்ணுவது என்ன என்பதை அமைப்பாளரால் பெருமளவு யூகித்து விட முடியும். இந்த யூகிக்கும் திறனை தனது தொழில் சார்ந்த விஷயம் தாண்டி வேறு விஷயங்களில் அமைப்பாளர் பயன்படுத்த மாட்டார். அதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறார். 

இதில் இன்னொரு விஷயம் உண்டு. அமைப்பாளரின் தொழில் கட்டுமானம். நிலம் கட்டிடம் ஆகியவை ஸ்தூல வஸ்துக்கள். கண்ணுக்கு முன்னால் தெரிபவை. நிலம் என்றால் அது எத்தனை ஏக்கர் எத்தனை கிரவுண்ட் எத்தனை சதுர அடி என்று எண்ணில் கூறி விட முடியும். ஜல்லி மணல் என்றால் எத்தனை கன அடி என. சிமெண்ட் என்றால் எத்தனை மூட்டைகள் என. கம்பி என்றால் எத்தனை கிலோ என. ஸ்தூல வஸ்துக்களின் மத்தியில் பணி புரிவதால் கட்டுமானத் தளத்தில் பணி புரியும் அனைவருமே சொல்லின்றி தங்கள் பணியை செய்யும் வழக்கம் கொண்டிருப்பார்கள். இங்கே கூடுதலாக ஒரு சொல் எடுப்பது கூட அவசியமின்மையாகக் கொள்ளப்படும். சிறிய மௌனங்களும் பெரிய மௌனங்களும் நிறைந்த இடமாக இருக்கும் கட்டுமானப் பணியிடம். மெஷின் ஓடும் சத்தமோ ஜல்லி அள்ளும் சத்தமோ மட்டுமே பணியிடத்தில் கேட்கும். 

ஆங்கிலத்தில் இண்ட்ராவெர்ட், எக்ஸ்ட்ராவெர்ட்,ஆம்பிவெர்ட் என மூன்று மனித சுபாவங்கள் உண்டு. இண்ட்ராவெர்ட் என்பவர் தன்னில் மூழ்கியிருப்பவர். எக்ஸ்ட்ராவெர்ட் என்பவர் பிறருடன் உரையாடிக் கலந்து இருப்பவர். ஆம்பிவெர்ட் என்பவர் இந்த இரண்டு இயல்புகளும் கொண்டிருப்பவர். அமைப்பாளர் தன்னை ஆம்பிவெர்ட் என்றே எண்ணிக் கொண்டிருந்தார். அவருடன் பழக்கம் உள்ள ஒருவர் அமைப்பாளரை  இண்ட்ராவெர்ட் இயல்பு கொண்டவர் என்றார். வெளிமாநிலத்தில் வங்கியில் பணி புரியும் தனது நண்பனுக்கு ஃபோன் செய்து இன்னார் என்னை இண்ட்ராவெர்ட் என்று சொல்கிறார் ; நான் என்னை ஆம்பிவெர்ட் என்று நினைக்கிறேன். நீ சொல் ; நான் இண்ட்ராவெர்ட் இயல்பு உள்ளவனா ஆம்பிவெர்ட் இயல்பு உள்ளவனா என்று கேட்டார். நண்பன் அவரிடம் அண்ணன் நான் சாயந்திரம் ஏழு மணிக்கு உங்களுக்கு ஃபோன் செய்கிறேன் என்றான். அமைப்பாளர் சரியாக ஏழு மணிக்கு அவனுக்கு ஃபோன் செய்தார். இப்போ சொல்லு என்றார். நண்பன் யோசித்துப் பார்த்து விட்டு அண்ணன் என் மனசுல நீங்க இந்த பக்கமா அந்த பக்கமா என ஊசல் அலையுது இண்ட்ராவெர்ட் பக்கம்தான் அண்ணன் ஊசல் போகுது என்றான். ஆம்பிவெர்ட் னு கூட சொல்ல முடியாதாடா தம்பி என்றார். நண்பன் அமைதியாக இருந்தான். 

‘’தம்பி ! ஒரு கிராமத்துல இருக்கற 450 குடும்பம் 5000 பேர் எனக்கு நேரடியா பழக்கம் டா. அவங்க எல்லாருக்கும் என்னை தெரியும்.  எப்படி 5000 பேரோட பேர ஒரு ஆள் ஞாபகம் வச்சுக்க முடியும் சொல்லு. அவங்க எல்லாரோட வீட்டுக்கும் போயிருக்கன். எங்க பாத்தாலும் என்னை விசாரிப்பாங்க. ஏன் அடிக்கடி வரதில்லைன்னு கேப்பாங்க. எவ்வள்வு பிரியம் தெரியுமா? இத்தனை பேரோட பழகி கனெக்ட் ஆகியிருக்கற ஒருத்தன நீங்க இண்ட்ராவெர்ட்னு சொல்லுவீங்களா? 

அண்ணன்! நீங்க கிரியேட்டிவ் ஆளு அண்ணன். கிரியேட்டிவ் ஆளுங்க கொஞ்சம் இண்ட்ராவெர்ட்டா தான் இருப்பாங்க. உங்களுக்குத் தெரியாததுல்ல. 

கிரியேட்டிவிட்டியைச் சொன்னதும் அமைப்பாளர் அமைதியாகி விட்டார். இப்போது அவர் தன்னை ஆம்பிவெர்ட் என சொல்லிக் கொள்வதா வேண்டாமா என ஐயம். இந்த விஷயத்தை எந்த முடிவும் எடுக்காமல் அப்படியே விட்டு விடுவோம் என விட்டு விட்டார். 

அமைப்பாளரிடம் ‘’காவிரி போற்றுதும்’’ செய்திருக்கும் செயல்கள் என்ன என்று எப்போதாவது யாராவது கேட்பதுண்டு. பல செயல்களைக் கூறலாம். இந்த செயல்கள் அனைத்தும் சாமானியமான கிராம மக்கள் செய்தவை ; மை நஹி ; தூ ஹி என ஒரு வாக்கியம் உண்டு. நான் அல்ல ; எல்லாம் நீயே என்பது அதன் பொருள். நான் அல்ல ; எல்லாம் கிராம மக்களே. 

பல செயல்களைப் பட்டியல் போட முடியும் :

 1. காவிரி வடிநில கிராமம் ஒன்றில் 20,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விவசாயிகளின் தோட்டங்களில் நடச் செய்தது. அந்த எண்ணிக்கை ஒரு மேஜிக்கல் எண்ணிக்கையே. மத்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணி புரியும் விஞ்ஞானியான ஒரு நண்பர் என்னிடம் ‘’கல்லில் நார் உரிக்கும் ஆளுயா நீ’’ என்றார் ; காவிரி வடிநிலத்தில் இந்த விஷயம் செய்தது குறித்து.  

2. ஒரு கிராமம் முழுமைக்கும் கோவிட் தடுப்பூசி போடப்பட்டது. முழுக்க முழுக்க ஒவ்வொரு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து சாதித்த விஷயம் இது. மாவட்டத்திலேயே அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் முதலிடம் பெற்றதற்காக மாவட்ட ஆட்சியரின் விருது பெற்றது. அந்த கிராமத்துக்கு இப்போது ஆரம்ப சுகாதார நிலையம் கிடைத்துள்ளது. 

3. நாட்டின் குடியரசு தினத்தைக் கொண்டாட கிராமத்தின் எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.

இன்னும் இன்னும் என மேலும் கூட பட்டியலிட முடியும். 

அமைப்பாளர் என்ன எண்ணுகிறார் என்றால் இன்னும் அவரால் ஒரு அமைப்பாக உருவாகிட முடியவில்லையே என. அமைப்பை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள். உடனிருந்து உதவுபவர்கள் இருக்கிறார்கள். ஊக்கப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அமைப்பாளரால் ஸ்தூலமாக ஒரு அமைப்பைக் காட்ட முடியவில்லையே என்பதே அவர் தீவிரமாக சிந்திக்கும் விஷயம். இதனை அடுத்து அமைப்பாளருக்கு தோன்றும் விஷயம் ஆற்றும் செயல்கள் தானே முக்கியம் அதனை அமைப்பை உருவாக்கிக் கொண்டு செய்தால் என்ன அமைப்பு இல்லாமல் செய்தாமல் என்ன என்று. அமைப்பு உருவாக்குவதையே ஒரு செயலாகச் செய்தால் என்ன என்று அமைப்பாளர் யோசித்தார். அப்போது அவருக்கு ஒரு கேள்வி வந்தது. தான் இண்ட்ராவெர்ட்டா அல்லது ஆம்பிவெர்ட்டா என. சுற்றி சுற்றி ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்பது அமைப்பாளருக்கு நகைச்சுவையாக இருக்கிறது. தனக்குள் புன்னகைத்துக் கொள்கிறார்.