Wednesday, 30 July 2025

காவிரி போற்றுதும் - புதிய செயல் வடிவம்

’’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து அறிமுகமாகியிருந்த நர்சரி உரிமையாளர் ஒருவரை இன்று காலை சந்தித்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்குத் தேவையான மரக்கன்றுகளை தனது பங்களிப்பாக வழங்கி ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்தார். அவருடனான உரையாடல் திருப்திகரமாக இருந்தது. நண்பரின் ஆதரவை எவ்விதம் கிராம வளர்ச்சியுடனும் விவசாயிகள் நலனுடனும் முழுமையாக இணைப்பது என்பது குறித்து யோசித்தேன். ஒரு புதிய வடிவம் மனதில் தோன்றியது.  

முன்னர் செயல்படுத்திய முறை என்பது கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று கணக்கெடுப்பது. இம்முறையும் அது நீடிக்கிறது ; சிறு மாற்றத்துடன். ஒரு கிராமத்தில் 450 வீடுகள் இருக்கும். 1 லிருந்து 450 என டோக்கன் எண் மட்டும் குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வழங்கி விடுவது. அந்த டோக்கனுக்கு ஒரு தென்னம்பிள்ளை, ஒரு நெல்லிக்கன்று, ஒரு கொய்யாக் கன்று, ஒரு எலுமிச்சைச் செடி என நான்கு கன்றுகளை வழங்குவது. கன்றுகள் வழங்குவதற்கு ஒன்பது நாட்கள் முன்பு இராமாயண நவாஹம் ஒன்றைத் துவக்குவது. ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் அன்று மரக்கன்றுகள் வழங்கப்படும். டோக்கன் வழங்கும் போது இராமாயண நவாஹம் ஒன்பது நாட்கள் நடப்பதைக் கூறி ஒவ்வொரு நாளும் நிகழ்வுக்கு வருகை புரியவேண்டும் என கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் கேட்டுக் கொள்வது. இராமாயண நவாஹம் நடைபெறும் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீடாகச் சென்று 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழியினை வெட்டி அதில் மக்கிய சாண எருவையோ மக்கிய குப்பையையோ கொட்டி மரம் நடும் முறையை விளக்கிச் சொல்வது. நவாஹத்தின் ஒன்பதாவது நாள் மக்கள் பெருமளவு கூடும் விதத்தில் கூடுகை ஏற்பாடு செய்து அன்றும் மரம் நடும் முறையை விளக்குவது. மக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் அளிப்பது. அவை வளர்வதை உறுதி செய்வது. பராமரிப்பு குறைவாக இருந்தால் சிறிய அளவில் மாற்றித் தந்து துணை நிற்பது. நன்றாக எல்லாரும் வளர்க்கையில் அவர்கள் விரும்பும் கன்றுகள் எத்தனை என்று கேட்டு அவற்றையும் அளிப்பது. இவை அனைத்தும் நிறைவு பெற்றதும் கிராமத்தின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது. 

கீழ்க்காணும் வரிசையில் செயல்கள் நிகழ்த்த திட்டமிட்டுள்ளேன். 

1. டோக்கன் வினியோகம். டோக்கன் வினியோகத்தின் போதே இராமாயண நவாஹம் துவங்கும் நாளையும் ஸ்ரீராமர் பட்டாபிஷேக நாளையும் கூறி நவாஹத்துக்கு அனைவரையும் அழைத்தல். 

2. ஒவ்வொரு வீடாகச் சென்று மரக்கன்றுகள் நடும் முறையை விளக்குதல்

3. ஸ்ரீராமர் பட்டாபிஷேக தினத்தன்று சமபந்தி போஜனம் ஏற்பாடு செய்வது. அப்போதே மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்குவது. 

4. மரக்கன்றுகள் வளர்ச்சியை கண்காணிப்பது. 

5. கூடுதலாக மரக்கன்றுகள் வேண்டும் என்பவர்களுக்கு வழங்குதல்

6. கிராமத்தின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல்.