Friday, 15 August 2025

குரு கோவிந்த் சிங்


 நூல் : குரு கோவிந்த் சிங் ஆசிரியர் : வ.வே.சு ஐயர் பக்கம் : 80 விலை ரூ.80 பதிப்பகம் : சுடர் பதிப்பகம், 5, ஜோதி நகர் 4-வது தெரு, மாடம்பாக்கம், சென்னை - 600073

நமது நாட்டின் வட மேற்கு திசையிலிருந்து நமது நாட்டை ஆக்கிரமிக்க நமது நாட்டின் செல்வத்தை கொள்ளையடிக்க நமது நாட்டை ஆட்சி செய்ய ஆக்கிரமிப்பாளர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக முயற்சித்த வண்ணம் இருந்தனர். அராபியர்கள், துருக்கியர்கள், மொகலாயர்கள், பாரசீகர்கள், ஆப்கானியர்கள் ஆகியோர் இவ்விதம் நம் நாட்டை நோக்கி படையெடுத்து வந்தனர். போர்வெற்றியின் மூலம் நாட்டின் வட பகுதியிலும் மைய நிலத்திலும் அவர்கள் தங்கள் அரசை அமைத்தனர். இருப்பினும் அவர்கள் ஆட்சி நிலைகொண்டிருந்த காலம் முழுவதும் அந்த ஆட்சியை சுதேச மக்களும் சுதேச மன்னர்களும் எதிர்த்த வண்ணமே இருந்தனர். ராஜபுத்திரர்களும் மராத்தியர்களும் விஜயநகரப் பேரரசும் ஆக்கிரமிப்பாளர்களின் அரசை அகற்றி சுதேச அரசுகளை நிறுவினர். இந்த வரிசையில் முக்கியமானவர்கள் சீக்கியர்கள். இந்திய வீரத்தின் ஒளி விடும் வைரங்களில் முக்கியமானவர்கள். 

ஐந்து நதிகள் பாயும் பஞ்சாப்பில் விவசாயிகளாக குடியானவ வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த சமூகம் சீக்கிய சமூகம். ஞானியான குரு நானக்கின் போதனைகளைப் பின்பற்றி வந்தனர். ஔரங்கசீப் அந்த சமூகத்துக்கு பெரும் இடைஞ்சல்களைக் கொடுத்து அவர்களை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தி வந்தான். ஔரங்கசீப்பின் மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர் குரு கோவிந்த் சிங். அவர்கள் பஞ்சாப்பின் குடியானவ சமூகத்தை போர்ச் சமூகமாக மாற்றினார். நாட்டைக் காக்க பண்பாட்டைக் காக்க ஒவ்வொரு குடியானவனும் போர்வீரனாக மாற வேண்டும் என்று தம் மக்களுக்கு எடுத்துச் சொன்னார். கேசம், கச்சை, கங்கணம், வாள், தலைப்பாகை ஆகிய ஐந்து சின்னங்களை எப்போதும் தரித்து மனதால் போர் வீரனாக இருக்கும் ஒரு சமூகத்தை உருவாக்கினார். அவர் உருவாக்கிய வீரம் செறிந்த வாழ்க்கைமுறையும் வீரம் செறிந்த மதிப்பீடுகளும் இன்றும் சீக்கியர்களை நம் நாட்டின் காவலர்களாக இருத்துகிறது. குரு கோவிந்த் சிங் போல நாட்டுக்காகவும் பண்பாட்டுக்காகவும் அத்தனை வலிகளையும் துயர்களையும் சுமந்த இன்னொருவர் இருக்க முடியாது. அத்தனை தியாகங்கள் நிறைந்தது அவருடைய வாழ்க்கை. தன் வாழ்நாள் முழுதும் வெற்றி தோல்விகள் குறித்து கவலைப்படாமல் போராடிக் கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையே பின்னாளில் சீக்கியர்கள் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்க காரணமாக அமைந்தது. 

குரு கோவிந்த் சிங்கின் தியாக வரலாற்றை தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு ஐயர் ‘’குரு கோவிந்த் சிங்’’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார்.