நூல் : ஸ்திதப்பிரக்ஞன் ஆசிரியர் : சோ பக்கம் : 138 விலை : ரூ.110 பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம், ப.எண் 244, ராமகிருஷ்ண மடம் சாலை, மயிலாப்பூர்,600004
துக்ளக் இதழில் அதன் அப்போதைய ஆசிரியர் சோ அவர்கள் முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் மறைவுக்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரையும் அவரைப் பற்றிய வேறு சில கட்டுரைகளும் அவருடைய நேர்காணல்களும் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மொரார்ஜி தேசாய் என்ற மகத்தான மனிதரின் ஆளுமையின் மகத்தான தன்மையின் சில பகுதிகளை இந்நூல் வழியே நாம் அடையாளம் காண முடிகிறது.
லால் பகதூர் சாஸ்திரிக்குப் பின் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றிருக்க வேண்டியவர் மொரார்ஜி தேசாய். அதுவே இயல்பான தேர்வாக இருந்திருக்கும். காமராஜர் இந்திரா காந்தியை நாட்டின் பிரதமராக்க சில முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அவை வெற்றி பெற்றன. நேருவின் வாரிசு என்னும் அடையாளத்தை எப்போதும் தன் கவசமாகக் கொண்டிருந்த இந்திரா காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மீது அச்சமும் விலக்கமும் கொண்டிருந்தார். அது காங்கிரஸ் கட்சியை அவர் உடைக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. நாடெங்கும் இந்திரா சர்க்காருக்கு எதிரான மனோபாவம் மக்களிடம் உருவாகி வந்ததை உணர்ந்த இந்திரா ஜனநாயகத்தைப் படுகுழியில் புதைத்து ‘’நெருக்கடி நிலை’’யை செயலாக்கினார். தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அதிகாரிகள் கையில் ஆட்சியைக் கொடுப்பதன்றி வேறேதும் அல்ல அச்செயல். நாடு பல மாதங்கள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் சென்றது. அது மிகப் பெரிய கொந்தளிப்பான காலகட்டம். நமது நாட்டின் மேற்கு கிழக்கு ஆகிய இரு திசைகளிலும் பாகிஸ்தான் , சீனா என நம்மை ஆக்கிரமித்த பகை நாடுகள், உலகமே அமெரிக்கா - ருஷ்யா என இரு நாடுகளின் அணியில் சேர்ந்திருக்கும் நிலை , நாட்டின் வறுமை, நாட்டின் கல்வியறிவு, நாட்டின் பொருளாதாரம் என பல்வேறு விதமான சிக்கல்கள். இத்தகைய சிக்கல்களில் நாடு சிக்குண்டு இருந்த போது நாட்டைப் பற்றியும் நாட்டின் எதிர்காலம் குறித்தும் மொரார்ஜி பேசியிருக்கும் நிறைய விஷயங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன. இக்கட்டான நிலையிலும் அவர் நம்பிக்கையளிக்கும் விஷயங்களை மட்டுமே கண்ணுற்றார் என்பதும் நம்பிக்கையளிக்கும் விஷயங்களை மட்டுமே பேசினார் என்பதும் அவர் எத்தனை மகத்தான மனிதர் என்பதைக் காட்டுகிறது. இலட்சியவாதத்திற்கான இடத்தை எப்போதும் இல்லாமல் செய்து விட முடியாது என்பதற்கு மொரார்ஜி தேசாய் அவர்களின் சொற்களே சாட்சி.
முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாயின் ஆளுமையின் முக்கியமான பகுதிகளை அடையாளப்படுத்தும் நூல் ‘’ஸ்திதப்பிரக்ஞன்’’.