Saturday, 23 August 2025

ஒரு புதிய கண்டடைதல்

 இன்று ஒரு புதிய சாலையின் வழியே பயணித்தேன். இந்த பிராந்தியத்தின் எல்லா சாலைகளிலும் அனேகமாக ஒரு முறையேனும் பயணித்திருப்பேன். முன்னரெல்லாம் புதிதாக ஊர்களைக் காணவும் புதிதாக சாலைகளின் வழி பயணிக்கவும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கூட பயணங்கள் மேற்கொள்வேன். நடுவயதில் இருக்கும் இப்போது ஏதேனும் சாலைகளில் செல்லும் போது கிளைச்சாலைகளைக் கண்டால் இது எங்கே செல்லும் என்பது ஞாபகம் வரும் ; அப்போது இளமைக் காலத்தில் எத்தனை பயணம் மேற்கொண்டிருக்கிறோம் என்னும் வியப்பும் ஏற்படும். தினம் பயணிக்க வேண்டும் என்னும் உணர்வே அகத்தை புதிதாக வைத்துக் கொள்ளும் என எண்ணுவேன். குத்தாலத்திலிருந்து அணைக்கரைக்கு காமாட்சிபுரம் கோணலாம்பள்ளம் ஆகிய ஊர்களின் வழியே செல்ல ஒரு சாலை இருப்பதை மைல்கற்கள் மூலம் அறிந்தேன். அந்த பாதை வழியே நான் சென்றதில்லை என்பதால் இன்று அந்த வழியே பயணித்தேன். அசல் தஞ்சாவூர் கிராமங்கள். எப்போதுமே புதிய நிலத்தைப் பார்க்கும் போது அந்த நிலத்தில் வாழலாம் எனத் தோன்றும். இன்று நான் பார்த்த கிராமங்கள் வளமான தஞ்சாவூர் மாவட்ட கிராமங்கள். மானசீகமாக அந்த ஊர்களில் 15 ஏக்கர் நிலம் வாங்கி அதில் மரப்பயிர்கள் வைத்து தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தேன்! ரியல் எஸ்டேட் எனது தொழில் என்பதால் இவ்விதமான எண்ணமும் கற்பனையும் எழுவதைத் தடுக்க முடியாது ! இன்று ஒரு புதிய வழித்தடத்தை அறிந்து கொண்டதும் அதில் பயணித்ததும் மகிழ்ச்சியை அளித்தது.