Sunday, 24 August 2025

ஐயம் தெளிதல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் தனது நடுவயதில் இருக்கிறார். இன்று அமைப்பாளரை வயதின் அடிப்படையில் இளைஞர் என்று கூறமுடியாது. 18 லிருந்து 40 வயது வரை இருப்பவர்களை இளைஞர்கள் என்று கூற முடியும் என்றால் அமைப்பாளரை இளைஞர் எனக் கூற முடியாது. வயது ஒரு உண்மை என்பதால் அமைப்பாளருக்கு அது குறித்து வருத்தம் இல்லை. ஆனால் அவருக்கு வேறு வகையான வருத்தங்கள் இருக்கின்றன. வாழ்க்கை என்றால் சுக துக்கம் வருத்தம் இன்பம் இருக்கும்தானே ! இதனைப் புரிந்தவர்தான் அமைப்பாளர். அவருடைய பிரத்யேக வருத்தம் என்னவெனில் ஓர் இளைஞனுக்கு ஏற்படும் கேள்விகளும் ஐயங்களும் அமைப்பாளருக்கு அவ்வப்போது ஏற்படுகின்றன. இவ்விதம் இருப்பது யதார்த்தமானதுதானா என்னும் கேள்வி அமைப்பாளருக்கு இருக்கிறது. அது குறித்துதான் அவ்வப்போது வருந்துவார்.  

பெரும்பாலான மனிதர்கள் பொதுவாக ‘’ஷண சித்தம் ஷண பித்தம்’’ என முடிவெடுத்து விடுகிறார்கள் என்பது அமைப்பாளரின் எண்ணம். இருப்பினும் அவ்விதமான மனிதர்களுக்கும் அல்லல்கள் இருக்கின்றன. அலசி ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கும் மனிதர்களுக்கும் அல்லல் இருக்கிறது. இப்போது அமைப்பாளரின் கேள்வி அல்லல் குறித்து. மனித வாழ்க்கை என்று வந்து விட்டாலே அல்லலும் துன்பமும் தவிர்க்க முடியாதது தானா ? இந்த கேள்வி அமைப்பாளருக்கு இளைஞனாயிருந்த போதும் இருந்தது . அப்போது ஒட்டு மொத்த மானுட அல்லலும் இல்லாமல் போகும் நாள் வரும் எனத் தீவிரமாக நம்பியிருப்பார். இப்போதும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. 

அமைப்பாளர் சில மாதங்களுக்கு முன்னால் அவர் பகுதிக்கு குடி வந்த ஒரு இளைஞரைச் சந்தித்தார். இரண்டு தெரு தள்ளி குடியிருப்பவர் அவர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட ஒரு கட்சியின் கிராமப் பொறுப்பாளர் அந்த இளைஞர். நடைமுறை அரசியல் குறித்து நடைமுறை அரசியலின் இயங்குமுறை குறித்து அரசியலுக்கு சாமானியர்கள் மனதில் அளிக்கும் இடம் குறித்து என பல விஷயங்களைப்  பொதுவாக பேசிக் கொண்டிருந்த போது அமைப்பாளர் அந்த இளைஞருக்கு  மேற்படி விஷயங்கள் குறித்து குறிப்பிடத்தக்க அவதானங்கள் இருக்கின்றன என எண்ணினார் அமைப்பாளர். ‘’நீட்’’ தேர்வு குறித்து பேச்சு வந்தது. அந்த இளைஞர் ‘’நீட்’’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார். அமைப்பாளர் தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மருத்துவக் கல்லூரி மாணவர் இடங்கள் இருக்கின்றன என்று கேட்டார். அந்த இளைஞர் அதனை அறிந்திருக்கவில்லை. அமைப்பாளர் சொன்னார் : ''தம்பி ! மொத்த சீட்டே 12,000 தான். இந்த விஷயம் 12,000 பேர் சம்பந்தப்பட்டது. 234 தொகுதிக்கு கணக்கு பண்ணா சராசரியா தொகுதிக்கு 50 பேர் சம்பந்தப்பட்ட விஷயம். ‘’ அரசியலில் இருப்பதால் அந்த இளைஞர் அந்த கணக்கைப் புரிந்து கொண்டார். அவருக்கு அதிர்ச்சி . ஆச்சர்யமும் கூட. ’’எந்த விஷயமா இருந்தாலும் யோசிக்கணும் தம்பி’’   

சமூகத்துக்காக தான் செய்யும் செய்ய நினைக்கும் செயல்கள் பலன்களைத் தருகிறதா என்னும் ஐயம் அமைப்பாளருக்கு ஏற்படும். சமூகச் செயல்பாடுகளை ஆற்றுவதற்குத் தேவைப்படும் அனைத்தையும் தாம் வழங்குகிறோமா என்னும் கேள்வி அமைப்பாளருக்கு உண்டு. அமைப்பாளர் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். பலன் பற்றி கருத வேண்டாம் ; பலன் முக்கியம்தான் ; ஆனால் நாம் நினைக்கும் பலன் மட்டுமே எல்லாமும் அல்ல ; செயல் மட்டுமே நிகழ்காலத்தில் இருக்கிறது. பலன் எதிர்காலத்தில் இருக்கிறது; எதிர்காலம் இப்படி இருக்க வேண்டும் என விரும்பினால் அதற்கு நிகழ்காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்தே ஆக வேண்டும். இதைப் புரிந்து கொண்டு நம்மால் முடிந்ததை சிறப்பாக இன்னும் ஆகச் சிறப்பாக செய்ய முயற்சி செய்வோம் என முடிவெடுத்துள்ளார். 

ஊருக்கு அருகில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்வது ; ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் ஒரு மரக்கன்றை எவ்விதம் 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழியைத் தோண்டி அதில் மக்கிய சாண எருவைக் கொட்டி நடுவது என்பது குறித்து எடுத்துச் சொல்வது ; ஒவ்வொரு வீட்டுக்கும் முதல் கட்டமாக ஒரு கொய்யா, ஒரு பலா, ஒரு எலுமிச்சை ஆகிய மூன்று மரக்கன்றுகளை வழங்குவது என முடிவெடுத்துள்ளார். 

எல்லா வீடுகளிலும் மரக்கன்றுகள் சிறப்பாக வளர வேண்டும் என எதிர்பார்ப்பது மனித இயல்பு தான். எனினும் எல்லா மனிதர்களும் ஒரே விதமாக இருப்பதில்லை. ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் ; பகுதியளவு மட்டும் புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் ; ஊக்கத்துடன் செயலாற்றுபவர்கள் இருக்கிறார்கள் ; சோம்பல் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த புரிதல் இருந்தால் நமது செயல்பாடுகள் இன்னும் நேர்த்தி அடையும். நாம் எதிர்பார்க்கும் பலன் ஒருவேளை கிடைத்தாலும் கிடைக்கும்.