ஊருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவில் இருக்கிறது சிதம்பரம். அங்கே எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். தோட்டம் ஒன்றை வாங்க அவர் ஆர்வம் கொண்டிருந்தார். அந்த தோட்டம் விலைக்கு வருகிறது என்பதை நான் அவருக்குக் கூறினேன். அந்த தோட்டத்தின் உரிமையாளர் சீர்காழியில் உணவகம் ஒன்றை நடத்துகிறார். சீர்காழி ஊருக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் இரண்டு ஊர்களுக்கும் சம தொலைவில் இருக்கிறது. சீர்காழிக்கு அருகில் இருக்கும் நாங்கூர் தோட்ட உரிமையாளரின் வீடு. நேற்று காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். நண்பருக்கு காலை 6.15க்கு சந்திக்க வருகிறேன் என குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் வீட்டு வாசலைச் சென்றடைந்த போது நேரம் எத்தனை என்று பார்த்தேன். 6.13 எனக் காட்டியது. அந்த வீட்டின் பணியாள் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். 15 தினங்களுக்கு முன்னால் நண்பர் வீட்டுக்கு இதே நேரத்துக்குச் சென்றிருந்தேன். அப்போதும் அதே பெண்மணி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ஆச்சர்யம். ’’தம்பி! நீங்க இந்த ஊர்தானா? உங்க வீடு எங்க இருக்கு?’’ என்று கேட்டார். நான் விபரம் சொன்னேன். அவருக்கு ஆச்சர்யம். நண்பர் 10 தினங்களாக ஊரில் இல்லை. அவருக்கும் தோட்ட உரிமையாளருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். நண்பர் சில நிமிடங்களில் தயாராகி விட்டார். எனது வாகனத்தை அவர் வீட்டில் நிறுத்தி விட்டு நண்பருடன் காரில் நாங்கூருக்குப் பயணமானேன். நாங்கூரில் சந்திப்பு 45 நிமிடம் நீடித்தது. பின்னர் அங்கிருந்து சிதம்பரம் புறப்பட்டோம். அங்கே சென்று எங்களுக்குள் பேச வேண்டிய விஷயங்களைப் பேசினோம். நண்பரிடம் விடை பெற்று புறப்பட்டேன். சீர்காழி வந்தேன். தோட்டக்காரரின் உணவகத்துக்குச் சென்றேன். உரிமையாளர் வீட்டில் இருக்கிறார் என்றார்கள். அங்கே சென்று அவரைச் சந்தித்தேன். எங்கள் உரையாடல் 30 நிமிடம் நீடித்தது. சீர்காழியில் இன்னொரு வேலை இருந்தது. மீண்டும் வந்தேன். அந்த வேலையை முடித்து விட்டு ஊர் திரும்பினேன். நேரம் மதியம் 12.30. வீட்டுக்கு வந்ததும் ஓரிரு நிமிடங்கள் அமர்ந்து விட்டு வங்கிக்குச் சென்றேன். அங்கே சில பணிகள். வேலை முடிய 2 மணி ஆயிற்று. வீட்டுக்கு வந்து மதிய உணவருந்தினேன். அமர்ந்திருந்தாலும் நகர்ந்து கொண்டிருப்பதான உணர்வு ஏற்பட்டது.