குறைவாக மிகக் குறைவாக சினிமா பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. கடைவீதிக்குச் செல்லும் போது சினிமா போஸ்டர்களைக் காண்பேன். சினிமா போஸ்டர் என்றல்ல ; எல்லா விதமான சுவரொட்டிகளையும் நான் காண்பேன் ; வாசிப்பேன். இப்போது ஃபிளக்ஸ் வந்து விட்டது. தமிழ்நாட்டில் அவற்றில் மனித முகங்கள் மட்டுமே அதிகமாக இருக்கின்றன. அதிகமான மனித முகங்களும் குறைவான வாசகங்களும். தமிழ்ச் சமூகம் சினிமாவின் மீது அதிகம் ஈர்ப்பு கொண்ட சமூகம். தமிழ்ச் சமூகமும் தெலுங்கு சமூகமும் இவ்விதத்தில் ஒப்புமை கொண்டவை. சில மாதங்களுக்கு முன்னால் கடைவீதி வழியாக நடந்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு அமைப்பின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது ; மாவட்ட பொறுப்பு அளிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி. நான் நின்று வாசித்துக் கொண்டிருந்தேன். எனது நண்பர் ஒருவர் எனக்குப் பின்னால் வாகனத்தில் வந்து நின்றிருக்கிறார். நான் அவர் வந்ததை கவனிக்கவில்லை. வாசித்து முடித்ததும் தான் அவரைப் பார்த்தேன். இருவரும் புன்னகைத்துக் கொண்டோம். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டார். இந்த போஸ்டரை பார்த்துக் கொண்டிருந்தேன் என்றேன். பரபரப்பான கடைவீதி என்றார். சிலராலாவது பார்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தானே ஒட்டப்படுகிறது என்றேன். நான் சிறிய திரைகளில் அதாவது தொலைக்காட்சி மடிக்கணினி ஆகியவற்றில் திரைப்படம் பார்க்க மாட்டேன். பெரிய திரையில் மட்டுமே காண்பேன். ஆனால் இப்போது பெரிய திரையில் சினிமா பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. அனைவரும் அலைபேசியில் படம் பார்க்கிறார்கள். பெருந்திரளுடனான தொடர்பு ஊடகமாக திரைப்படங்களைப் பார்ப்பது உண்டு. ஜனத்திரள் அதனுடன் எவ்விதம் தொடர்பு கொள்கிறார்கள் என்பதை அறிய அதிலிருந்து சில விஷயங்களை ஆராய திரைப்படங்கள் உதவும். நான் பரவாயில்லை என்னும் வகையில் மதிப்பிடும் படங்கள் பொதுமக்கள் மிக விரும்புவதாய் இருக்காது. பொதுமக்கள் மிக விரும்பி பார்க்கும் படங்களை நான் பார்த்தால் எனக்கு பரவாயில்லை என்று தோன்றாது. இது ஒரு அவதானம் மட்டுமே. மூன்று மாதத்துக்கு ஒரு படம் என்பது எனக்கு ஒரு சராசரி கணக்கு. இப்போது திரையரங்கங்கள் பெரிதும் மாறி விட்டன. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.150 எனில் பொதுமக்கள் குடும்பத்துடன் வரும் போது ஒவ்வொரு டிக்கெட்தாரருமே பாப் கார்ன், பப்ஸ், ஐஸ் கிரீம் ஆகியவற்றுக்கு ரூ.150 செலவழிப்பார்கள் என்று தோன்றுகிறது. சினிமா டிக்கெட்டில் கிடைக்கும் வருமானத்தை விட பாப் கார்ன், பப்ஸ் விற்று கிடைக்கும் வருமானம் கணிசமாக இருக்கும் என்று தோன்றுகிறது. குடும்பங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சினிமா தியேட்டரில் வைத்துக் கொள்கிறார்கள். சினிமா தியேட்டரில் கேக் ஆர்டர் செய்து அங்கேயே கேக் வெட்டி கொண்டாடி அலைபேசியில் செல்ஃபி எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். சினிமா தியேட்டர்களும் தங்கள் அரங்குகளை இவ்விதத்தில் வடிவமைக்கின்றன. நேற்று ஒரு சினிமாவுக்கு சென்றிருந்தேன். ஒரு டிக்கெட் அளித்தார்கள். ஆங்கில அட்சரம் ’’ஈ’’ எனக் குறிக்கப்பட்டிருந்தது. அது முன் வரிசை. நான் அதனை அவர்களிடம் திருப்பி அளித்து விட்டு ‘’ஏ’’ வரிசையில் அளிக்குமாறு கேட்டேன். அதுதான் பின் வரிசை. சினிமாவைப் பார்க்க சிறந்த இடம் ஆகக் கடைசி வரிசை. நாடகம் சர்க்கஸ் பார்க்க சிறந்த இடம் ஆக முன் வரிசை. உள்ளே சென்று அமர்ந்ததும் யோசித்தேன். ஏன் முன் வரிசை டிக்கெட்டை முதலில் தருகிறார்கள் என. பின்வரிசையிலிருந்து கொடுத்துக் கொண்டு வந்தால் தாமதமாக வருபவர்களுக்கு முன்வரிசையில் கொடுக்க நேரிடும். படத்தின் ஆரம்பக் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கும் போது இருக்கை எண்ணைத் தேடுகிறேன் என படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ம்றைப்பார்கள். பார்வையாளர்கள் பலருக்கு அதிருப்தி ஏற்படும். அதைக் குறைக்கவே இந்த வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.