Monday, 6 October 2025

பால்ய நண்பரின் நினைவு

எனக்கு அப்போது 7 வயது. எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு அப்போது 15 வயது. என்னை விட 8 வயது பெரியவராயிருந்தாலும் என்னை அவர் நண்பனாகவே நடத்தினார். நாங்கள் இருவரும் நிறைய பேசுவோம். என்னிடம் நிறைய விஷயங்களை கேட்பார். சொல்வார். அது சைக்கிள்களின் காலம். என்னை வார இறுதி விடுமுறை நாட்களிலும் தினமும் மாலை நேரத்திலும் சைக்கிளில் உட்கார வைத்து ஊர் முழுக்க அழைத்துச் செல்வார். நாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த குடும்பத்தின் உறவினர் அவர். படிப்புக்காக அங்கே வந்து தங்கியிருந்தார். ஒன்பதாம் வகுப்பில் இரண்டு முறை தோல்வியடைந்து விட்டார். அவர் உறவினர் சமூகத்தில் பெரிய மனிதர். அவரது பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் மூன்றாவது முறை ஃபெயில் ஆக்காமல் பாஸ் செய்தது ; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அவரது கல்வியை முடிவு செய்யட்டும் என. அப்போது ஒரு நிகழ்ந்ததாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அது ஒரு பெரிய நகைச்சுவை. இந்த சம்பவம் உண்மையா அல்லது கற்பனையா என்பது தெரியவில்லை. பெரிய மனிதர் என் நண்பரை பாஸ் செய்யுமாறு சொன்னதும் பள்ளி நிர்வாகம் விவாதித்திருக்கிறது. அப்போது பள்ளி நிர்வாகம் என்ன முடிவு செய்தது என்றால் ஃபெயில் ஆகியிருக்கும் ஒருவரை மட்டும் பாஸ் செய்ய முடியாது ; அதற்கு பதிலாக ஃபெயில் ஆன எல்லாரையும் பாஸ் செய்து விடலாம் என முடிவெடுத்து செயல்படுத்தினர். இந்த விஷயம் கேள்விப்பட்டு நண்பரால் பாஸ் ஆன அவரது வகுப்புத் தோழர்கள் பழம், வெற்றிலைப் பாக்குடன் வந்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு சென்றனர் என. நண்பர் ஒருமுறை என்னை அழைத்துக் கொண்டு ‘’என் அண்ணன்’’ என்ற எம்.ஜி.ஆர் படத்துக்கு கூட்டிச் சென்றார். அந்த படத்தில் எம்.ஜி.ஆர் குதிரை வண்டி ஓட்டுபவராக நடித்திருப்பார். குதிரை வண்டியில் சென்று ஓடும் ரயிலை சேஸ் செய்து நிறுத்துவார். ஒரு வருடம் அங்கே இருந்தேன். அதன் பின் அப்பாவுக்கு பணி மாறுதல் கிடைக்கப் பெற்று வேறு ஊருக்குச் சென்று விட்டோம். நண்பரைப் பிரிய நேர்ந்த போது நான் மிகவும் அழுதேன். நண்பர் எனக்கு ஆறுதல் கூறினார். நாம் அடிக்கடி சந்திப்போம் என்றார். அதன் பின்னும் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்தோம். நண்பர் பத்தாம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பு முடித்து உடற்பயிற்சிக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்று முதுநிலைப் பட்டமும் பெற்று உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். அவருக்கு சின்ன வயதிலிருந்தே விளையாட்டில் நல்ல ஆர்வம் உண்டு. தனது ஆர்வத்துக்கு ஏற்ற பணி அவருக்குக் கிடைத்தது மகிழ்ச்சியானது. நான் பொறியியல் கல்லூரி முடித்த ஆண்டில் பல்கலைக்கழகத்தில் அட்மினி பிளாக் எனப்படும் இடத்தில் அவரைத் தற்செயலாக சந்தித்தேன். இருவரும் கண் கலங்கி விட்டோம். இப்போதும் அவரை நினைக்கும் போது அவர் காட்டிய பிரியத்தை நினைக்கும் போது உளம் நெகிழ்கிறேன்.