Sunday, 12 October 2025

திராவிடக் கட்சிகளின் அரசுகள் சாராய அரசுகள்

நம் நாட்டுக்கு படையெடுத்து வந்த முஸ்லீம்கள் நம் நாட்டின் ஆலயங்களை இடித்து அதன் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். நம் நாட்டுக்கு வணிகம் செய்யும் நோக்கத்தோடு வந்து நம் நாட்டின் பெரும் பகுதியை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்த பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டின் பாரம்பர்யத் தொழில்களை நசித்து மக்கள் மீது கொள்ளை வரி விதித்து அந்த செல்வத்தை தம் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அவர்களின் 190 ஆண்டுகால ஆட்சியில் அவ்விதம் அவர்கள் கொண்டு போன செல்வம் எவ்வளவு அப்போது அவர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்களால் மடிந்து போன மக்கள் எத்தனை கோடி போன்ற விபரங்கள் இன்றளவும் புதிதாக கணக்கிடப்பட்டு அந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றன. நம் நாட்டுக்கு படையெடுத்து வந்து நம் நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்ற முஸ்லீம்களும் சரி நம் நாட்டின் ஏழை எளிய மக்களை வாட்டி வதைத்த பிரிட்டிஷ் அரசும் சரி அவை சாராய விற்பனையில் இறங்கவில்லை. பிரிட்டிஷார் கள்ளுக்கடை திறக்க அனுமதி அளித்தனர். கள்ளுக்கடை நடத்த அனுமதிக்கான தொகையைப் பெற்றுக் கொண்டனரே தவிர அவர்களே கள்ளுக்கடை நடத்தவில்லை. 

இந்திய ஜனநாயகத்தில் ஒரு மாநில அரசு ஊருக்கு ஊர் சாராயக்கடை திறந்து தன் குடிமக்களுக்கு சாராயம் விற்கிறது என்றால் அது தமிழக அரசு மட்டும்தான். உலகெங்கும் சாராயம் குடிக்கும் வழக்கம் இருக்கிறது. எல்லா அரசுகளும் சாராயத்தின் மீதும் சாராயக்கடைகளின் மீதும் கணிசமான வரி விதிக்கின்றன. ஓர் அரசாங்கமே மது வாங்குகிறது ; மதுவை விற்க ஊருக்கு ஊர் வாடகைக்கு கடைகளைப் பிடிக்கிறது ; மது விற்க அரசு ஊழியர்களை நியமிக்கிறது ; தனது குடிமக்களுக்கு மதுவை விற்கிறது ; ஒவ்வொரு மதுவும் ஒவ்வொரு கடையிலும் மது விற்பனை இவ்வளவு கூட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கிறது என்பது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் செயல். 

அரசாங்கங்களின் வரலாற்றில் ஜனநாயக அரசுகளே மக்கள் நலன் என்னும் மையக் கருத்தை பிரதானமாகக் கொண்டிருப்பவை. அவ்விதமான ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழக அரசு தன் குடிகளை அழிக்கும் ஒரு செயலை அரச ஆதரவுடன் அரச பாதுகாப்புடன் செய்வது என்பதைப் போல ஒரு வெட்கக்கேடு ஜனநாயகத்துக்கு வேறு ஏதும் கிடையாது. ஒரே அரசாங்கமே மாநிலமெங்கும் மருத்துவமனைகளை நடத்தும் ; அதே அரசாங்கமே சாராயமும் விற்கும் எனில் அதனை மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக எவ்விதம் கூற இயலும். ஒருபுறம் கருவுற்ற தாய்மார்களுக்கு அவர்கள் உடல்நலத்தைப் பேணும் பலவிதமான மருத்துவ உதவிகளை அளிப்பதாய் கூறும் அரசு அந்த பெண்ணின் கணவன் மது குடித்து தனது ஆரோக்கியத்தை அழித்துக் கொண்டு மரணத்தை நோக்கிச் செல்வதற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இந்த இரண்டில் மது விற்று தன் குடிகளை அழிக்கும் முகமே தமிழக அரசின் உண்மையான முகம். 1989ம் ஆண்டு ஆட்சி புரிந்த தி.மு.க சர்க்கார் மலிவு விலை மதுக்கடை என பாக்கெட் சாராயம் விற்கத் துவங்கியது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க சர்க்கார் ‘’டாஸ்மாக்’’ மூலம் சகல விதமான மதுவும் விற்க ஆரம்பித்தது. தி.மு.க சர்க்கார் மீண்டும் வந்ததும் ‘’டாஸ்மாக்’’கை பலமடங்கு தீவிரப்படுத்தினர். 

இன்று தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருமானமே பிரதான வருமானம் என்னும் நிலை ஏற்பட்டு விட்டது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கக்கூட டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானமே காரணம் என்னும் நிலை உள்ளது. இதன் காரணமாக குடிமக்களுக்கு மது விற்று அரசாங்கம் நடத்துவது என்னும் இழிவான முடிவை முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை எடுத்து செயல்படுத்துவதற்கு லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் அந்த பழியில் பாவத்தில் கை நனைக்கும் நிலை உள்ளது. 

2026ல் தேர்தல் வர இருக்கிறது. அடுத்து அமையவிருக்கும் தமிழக அரசு மது விற்க கூடாது. Either rule or quit என்று சொல்வார்கள். மது வருமானம் இல்லாமல் வேறு வரி வருவாய்களைக் கொண்டு ஆட்சி நடத்த முடியும் என்றால் ஆட்சி நடத்தட்டும். இல்லையெனில் அதிகாரத்தில் இல்லாமல் இருக்கட்டும்.