என் ஈசனே
உன்னைக் கண்டிருக்கிறேன்
உன்னைக் காண்கிறேன் என்னும் உணர்வு இன்றி
உன்னுடன் இருக்கிறேன் என்னும் உணர்வு இன்றி
என் முயற்சி இன்றி
என் தீரா வேட்கை இன்றி
உன் கருணையினால்
உன் பிரியத்தால்
உன் அன்பால்
உன்னைக் கண்டிருக்கிறேன்
எளிய உயிர் நான்
சிறிய உயிர் நான்
பெரும் அறியாமை மட்டுமே நான் கொண்டிருப்பது
நின் உளம் கணத்தின் கணமான நுண் நேரம் நினைவு கொண்டதால்
நின் கருணைப் பார்வை கணத்தின் கணமான நுண் நேரம் பார்த்ததால்
என்னிடம் பெரும் அறியாமை மட்டுமே இருக்கிறது
என்பதை
உணர்ந்து கொண்டேன்
அறிந்து கொண்டேன்
என் எண்ணங்கள்
என் நினைவுகள்
அனைத்திலுமே அறியாமை
துயராகவே
என் இருப்பை
பெரும்பாலும்
உணர்கிறேன்
என் ஈசனே
வலி கொண்டிருக்கிறது இறைவனே என் வாழ்வு
விழைவுகளின் வலி
உறவின் வலி
சுமந்து கொண்டிருக்கும்
வலிகளை
துயரங்களை
அறியாமையை
என்னா உதற முடியவில்லை
என் இறைவா
உன்னிடம்
முழுவதும் சரணடைந்து விடவும்
என்னால் முடியவில்லை
என் இறைவா
உன்னுடன் இருக்க வேண்டும்
உன்னுடன் கலந்து விட வேண்டும்
உன் கருணை மட்டுமே இதை நிகழ்த்தும்
உன் கருணையன்றி வேறேதாலும் இது நிகழாது
உயிர்கள் கருவறையில் இருப்பது போல்
நீயும் கருவறையில் இருக்கிறாய்
கருவறையில் இருப்பதால்
நீ சிசு
கருவறையில் இருப்பதால்
நீ சிசுவும்
சிசுவாகிய இறைவா
சிசுவாகிய ஈசா
உன்னை சிசுவாக எண்ணும்
இக்கணம்
நான் இளைப்பாறுதல் கொள்கிறேன்
சிசுவின் பாதங்களை சென்னி சூடுகிறேன்