ஒரு சிறு விதை மண்ணில் ஊன்றப்படுகையில் மெல்ல முளைத்து வேர், இலை, கிளைகளுடன் மண்ணில் பெருவிருட்சமாக எழுந்து விண்ணைத் தொட துழாவுகிறது.
கருவறையில் துளியினும் துளியாக சூல் கொண்டிருக்கும் உயிர் முதல் மாதத்தில் ஓர் அரிசி மணியின் அளவில் மட்டுமே இருக்கிறது ; பின்னர் ஓர் அருநெல்லியின் அளவில் இருக்கிறது. மூன்றாம் மாதத்தில் அந்த அருநெல்லி அளவுள்ள உயிர் கொண்டுள்ள உடலில் இதயம் துடிக்கத் தொடங்குகிறது ; மனித உடலின் நுட்பமான சீரண மண்டலம் நுண் அளவில் பதிட்டை ஆகிறது. மூளை உருவாகிறது. அரிசி மணி அளவில் சில மில்லிகிராம்கள் எடை கொண்டிருந்த உயிர் உடல் 30 வாரங்களில் 3000 கிராம் எடைக்கு வளர்கிறது. எலும்புகள், கண்களின் தசைகள், காற்றை ஜீவனாக்கும் நுரையீரல் அனைத்தும் கருவறைக்குள் முழு வளர்ச்சி பெற்று உலகில் நிறைய உலகை நிறைக்க உலகைக் காண வருகிறது.
இந்த உலகம் ஓர் அற்புதப் பெருவெளி. கணந்தோறும் அற்புதம் நிகழும் அற்புதப் பெருவெளி.