நூல் : காகா காலேல்கர் வகை : சரிதம் பக்கம் : 148 நூலாசிரியர் (ஹிந்தி): விஷ்ணு பிரபாகர் தமிழாக்கம் : அகிலா சிவராமன்
சாகித்ய அகாதெமி வெளியீடு
இணையத்தில் வாசிக்க : காகா காலேல்கர்
***
மராட்டிய மாநிலம் ஸதாராவைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரசு அதிகாரியான பாலகிருஷ்ண காலேல்கருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு பெரியவர் வருகை புரிந்தார். அவர் பாலகிருஷ்ண காலேல்கரிடம் ‘’இந்த வீட்டில் இன்னும் ஒரு குழந்தை பிறப்பான். அவன் குரு ஸ்ரீதத்தாத்ரேயர் அளிக்கும் வரப்பிரசாதம். ஆதலால் அவனுக்கு அவருடைய பெயரையே சூட்டுங்கள்’’ எனக் கூறி ஆசியளித்துச் சென்றார். அப்பெரியவர் கூறிய வண்ணமே அந்த வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஸ்ரீதத்தாத்ரேயரின் நாமம் சூட்டப்பட்டது. பின்னாட்களில் காகா காலேல்கர் என அழைக்கப்பட்ட அறியப்பட்ட காலேல்கரின் முழுப் பெயர் தத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்பதாகும்.
தந்தை அரசு அதிகாரியாக இருந்ததால் அவருக்கு பணி நிமித்தம் பல ஊர்களுக்கு செல்லும் வழக்கம் இருந்தது. காலேல்கர் சிறு வயதிலேயே ஆர்வத்தின் காரணமாக தந்தையுடன் பயணிக்கத் தொடங்குகிறார். அது வாழ்நாள் முழுவதும் அவர் ஒரு தேசாந்திரியாக வாழப் போவதன் தொடக்கமாக அமைந்திருக்கிறது.
மராட்டியத்தின் தேசியவாதிகள் பலரை உருவாக்கிய பூனா பெர்கூசன் கல்லூரியில் பயில்கிறார் காலேல்கர். தேசியவாதிகள் பலருடன் அவருக்கு அங்கே தொடர்பு ஏற்படுகிறது.திலகர் மீது பெரும் ஈடுபாடு கொண்டிருந்த காலேல்கர் விநாயக தாமோதர சாவர்க்கரின் அமைப்பில் பங்கெடுக்கத் தொடங்குகிறார். அன்றைய இந்திய தேசிய காங்கிரஸின் மூன்று பெரும் தலைவர்களான லால் - பால் - பால் ஆகிய மூவர் மீதும் பெரும் மதிப்பும் பெரும் பற்றும் கொள்கிறார் காலேல்கர். ‘’சாந்தி நிகேதனம்’’ நிறுவிய கவி ரவீந்திர நாத் தாகூரிடம் அணுக்கமாகிறார் காலேல்கர். விதி அவரை கல்வித்துறை நோக்கியும் இதழியல் நோக்கியும் அவரை திருப்புகிறது. தனது நீண்ட ஆயுள் முழுமைக்கும் தனது தேசியப் பணியை கல்வித் துறையிலும் இதழியலிலும் ஆற்ற அவருக்கு காலம் வாய்ப்பு கொடுக்கிறது.
தனது இளம் வயதில் ஒத்த மனம் படைத்த மேலும் இருவருடன் இணைந்து இமயமலைப் பகுதிகளில் 2500 கி.மீ பாத யாத்திரையை நிகழ்த்துகிறார் காலேல்கர். அப்போது அவருக்குத் துறவியாக வேண்டும் என்ற ஆவல் இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் மகாத்மா காந்தியைச் சந்திக்கிறார். மகாத்மாவின் ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’ நூல் தனது எல்லா தேடல்களுக்கும் பதில் அளிப்பதாக உணரும் காலேல்கர் அப்பொழுதிலிருந்து மகாத்மாவின் அணுக்கத் தொண்டன் ஆகிறார்.
குஜராத்தியரான மகாத்மா மராத்தியரான காகா காலேல்கரிடம் ஹிந்தி மொழிக்கான ஒரு கல்வி நிலையம் தொடங்குமாறு கூறுகிறார். குஜராத் வித்யா பீடம் அவ்விதம் உருவாகிறது. அக்கல்வி நிலையத்திற்குப் பொறுப்பேற்பதால் காகா காலேல்கர் புதிதாக குஜராத்தி மொழியைப் பயிலத் தொடங்குகிறார். தனது ஆர்வத்தின் காரணமாக மிக விரைவில் குஜராத்தி மொழியைப் பயின்று குஜராத்தியில் நூல்கள் இயற்றும் அளவுக்கு திறன் பெறுகிறார் காகா காலேல்கர். குஜராத்தியில் எண்ணற்ற நூல்கள் காகா காலேல்கரால் இயற்றப்பட்டுள்ளன. அவரை 125 சதவீத குஜராத்தி என்று மகாத்மா குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தி சிறை சென்ற காலங்களில் நவஜீவன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்திருக்கிறார் காகா.
மகாத்மா தேசத்தின் தேசிய மொழியாக ஹிந்தியே திகழ வேண்டும் என்ற ஆவலுடன் ஹிந்தி அதிகம் பேசப்படாத மாநில மக்களுக்கும் ஹிந்தி மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூற ‘’ஹிந்தி பிரச்சார சபா’’ அமைக்கிறார். அதன் தலைமைப் பொறுப்பில் இருந்து நீண்ட காலம் அதனை வழிநடத்தியவர் காகா காலேல்கர். ஒருமுறை அஸ்ஸாம் சென்று அங்கே அங்குள்ள மக்களிடம் ஹிந்தி கற்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார் காகா காலேல்கர். பல ஆண்டுகள் கழித்து அங்கே மீண்டும் செல்கிறார் காலேல்கர். அப்போது நூற்றுக்கணக்கான அஸ்ஸாமியர்கள் அவரைச் சந்தித்து பல ஆண்டுகளுக்கு முன்னால் வந்த காலேல்கர் பொதுக்கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டதாகவும் அதில் காலேல்கர் பேச்சில் ஈர்க்கப்பட்டு ஹிந்தி பயின்றதாகவும் தற்போது தாங்கள் மிக ந்ன்றாக ஹிந்தி அறிவோம் என்று கூறுகிறார்கள். தனது ஒரு கூட்டத்தின் சொற்கள் மேல் அஸ்ஸாம் மக்கள் வைத்திருந்த ஈர்ப்பும் அவர்களின் நம்பிக்கையும் காலேல்கரை நெகிழச் செய்கிறது.
நாடு சுதந்திரம் பெற்றவுடன் அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு முதல் பொதுத்தேர்தல் நிகழ்ந்து அமைக்கப்பட்ட முதல் பாராளுமன்றத்தில் கல்வி மற்றும் பண்பாட்டுப் பணிக்காக மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக நியமிகப்படுகிறார் காகா காலேல்கர். மகாத்மா காந்தியின் எழுத்துக்களைத் தொகுக்கும் பெரும் பணியின் நிர்வாக கமிட்டியில் உறுப்பினராக்கப்படுகிறார். இன்று நமக்குக் கிடைக்கும் ‘’The complete works of Mahatma Gandhi'' தொகுப்பின் உருவாக்கத்தில் காகா காலேல்கருக்கு பெரும் பங்கு உண்டு. அவருடைய கலை இலக்கிய சேவையைப் பாராட்டி அரசாங்கம் அவருக்கு ‘’பத்ம விபூஷண்’’ அளித்து கௌரவித்தது.
குஜராத்தி, ஹிந்தி, மராத்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எழுத்தாளராக விளங்கிய காகா காலேல்கர் சாகித்ய அகாதெமி விருதும் பெற்றுள்ளார்.
எழுத்தாளராக தேசத் தொண்டராக தேசாந்திரியாக விளங்கிய காகா காலேல்கர் நிறை வாழ்வு வாழ்ந்து தனது 96ம் வயதில் 1981ம் ஆண்டு இயற்கை எய்தினார்.