Saturday, 8 November 2025

ஜனநாயக அரசியல் - ஒரு விளக்கம் (நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று ஜனநாயக அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை) என்று ஒரு நகைச்சுவைக் கட்டுரையை எழுதினேன். எழுதும் போதும் எழுதிய பின்னும் மனதில் ஒரு விஷயம் சிறு சஞ்சலம் ஒன்றைத் தோற்றுவித்திருந்தது. அது என்னவெனில் தமிழ்ச் சமூகத்துக்கு ஜனநாயக அரசியல் 75 ஆண்டுகால பழக்கம் கொண்டது என எழுதியிருந்தேன். இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலம் முதலே இங்கே கட்சி அரசியல் தீவிரமாக இருந்திருக்கிறது. அப்படியெனில் 75 ஆண்டு காலம் எனக் குறிப்பிட்டிருப்பது சரியான தகவலா என்ற சஞ்சலம் இருந்தது.  

இன்று காலை அதற்கான பதில் என் மனதுக்குக் கிடைத்தது. நாடு சுதந்திரம் அடைந்து 1952ம் ஆண்டு முதல் பொதுத்தேர்தல் நடந்த போது தான் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை கிடைத்திருக்கிறது. அதற்கு முன் பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த தேர்தல்களில் சொத்துரிமை உடையவர்களும் பட்டம் பெற்றவர்களும் மட்டும் வாக்களித்திருக்கிறார்கள். 

இன்றைய தேதிப்படி கணக்கிட்டால் கூட ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 3000 எனில் அதில் சொத்துரிமை உடையவர்கள் என்று அதிகபட்சம் 300 பேர் இருக்கக் கூடும். அந்த காலகட்டத்தில் எழுத்தறிவு சதவீதம் 10 சதவீதமாக இருந்திருக்கிறது. எழுத்தறிவே 10 சதவீதம் என்றால் பட்டம் பெற்றவர்கள் 1 சதவீதம் ஆக இருந்திருப்பார்கள். 3000 மக்கள்தொகை கொண்ட கிராமத்தில் 300 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றிருப்பார்கள். 

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வாக்குரிமையே இருந்திருக்காது. 

75 ஆண்டுகளாகவே ஜனநாயக தேர்தல் அதிகார அரசியல் தமிழ்ச்சமூகத்துக்கு அறிமுகமாகியிருக்கிறது எனக் கூறியது சரியான கூற்றே என்னும் புரிதலை அடைந்தேன்.