Thursday, 18 December 2025

தமிழகத்தில் பள்ளிமாணவர்களிடம் தாராளமாகப் புழங்கும் போதைமருந்துகள்

எனது நண்பர் ஒருவர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஊருக்கு கிழக்கே 20 கி.மீ தொலைவில் இருக்கும் அவர் தலைமை ஆசிரியராய் இருக்கும் பள்ளிக்குச் சென்றிருந்தேன். பள்ளி மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக போதை மருந்துகள் புழங்குகின்றன என்று அவர் கூறியதைக் கேட்ட போது பேரதிர்ச்சியாக இருந்தது. மிகச் சிறிய போதை மருந்து சாக்லெட்டில் வைத்து ரூ.10க்கு அளிக்கின்றனர் என்று சொன்னார்.  

இன்றைய மாணவர்களிடம் பாக்கெட் மணியாக ஒவ்வொரு நாளும் ரூ.20 அல்லது ரூ.30 பெற்றொர்கள் அளிக்கின்றனர். அதனைக் குறிவைத்து ரூ.10க்கு போதை மருந்து சாக்லெட் விற்பனை செய்கின்றனர். அந்த சாக்லெட்டை உண்டால் உடலுக்கு ஒரு அதிர்வு உண்டாவதைப் போல் மாணவர்கள் உணர்கின்றனர். அந்த அதிர்வு தினமும் தேவை என தினமும் ரூ.10 கொடுத்து போதை மருந்து சாக்லெட்டை வாங்கத் துவங்குகின்றனர். அது பழகியதும் மேலும் போதைக்கு அதிக விலை கொடுத்து போதை வஸ்துக்களை நுகரும் நிலைக்குச் செல்கின்றனர் என்று சொன்னார். பள்ளியில் 2000 மாணவர்கள் பயில்கிறார்கள் என்றால் 500 பேருக்காவது போதை மருந்து சாக்லெட் பழக்கம் இருக்கிறது என்று கூறினார். பள்ளி மாணவர்கள் வழியாக பள்ளி மாணவிகளுக்கும் இந்த பழக்கம் ஏற்பட்டு விடுகிறது என்பதைக் கூறிய போது நான் அதிர்ந்து போனேன். 

தினமும் 500 மாணவர்கள் ரூ.10க்கு சாக்லெட் வாங்குகிறார்கள் என்றால் அந்த பள்ளியின் மாணவர்களால் ரூ.5000க்கு தினமும் போதை வியாபாரம் நடக்கிறது என்று பொருள். சாக்லெட் மற்றும் போதைப் பொருள் ரூ.500 + ரூ.500 எனக் கொண்டால் அடக்கம் ரூ.1000. விற்பனை விலை ரூ. 5000. ஒரு நாளைக்கு இந்த சாக்லெட் விற்பனை செய்யும் போதை வியாபாரிக்கு ரூ.4000 லாபமாகக் கிடைக்கும். ஒரு மாதத்துக்கு ரூ.1,00,000. 

ஒரு காலத்தில் தமிழகக் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போதைப் பொருட்களை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என அறிந்ததுண்டு. தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என்பதில் தமிழகக் காவல்துறை பிடிவாதமாக இருக்கும் எனக் கூறுவார்கள். இன்றைய நிலையை எண்ணினால் பேரதிர்ச்சியே மிஞ்சுகிறது. உடைந்த மனத்துடன் நண்பரிடம் விடை பெற்று வீடு திரும்பினேன்.