நூல் : பௌத்த வேட்கை ஆசிரியர் : தர்மானந்த கோசம்பி தமிழில் : தி. அ. ஸ்ரீனிவாஸன் பக்கம் : 271 விலை : ரூ. 340 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில், 629001.
ஒரு காலத்தில் மும்பையிலிருந்து கோவா செல்ல சாலை மார்க்கம் இல்லாமல் படகில் பயணம் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. கோவாவின் கிராமங்களில் மாலை அந்திக்குப் பிறகு இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை புலியின் உறுமல் கேட்கும் சூழல் இருந்திருக்கிறது. பஞ்சமும் நோயும் நாடெங்கும் நிலவிய காலம். அத்தகைய சூழலிலிருந்து ஒருவர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலுடன் நாடெங்கும் பல்லாண்டுகள் அலைகிறார். புத்தரின் வாழ்க்கையையும் செய்தியையும் பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது ஆவல். பசியும் பற்றாக்குறையும் அவரை நீங்காமல் பற்றுகிறது. அவர் கல்வி கற்ற வண்ணம் இருக்கிறார். கோவாவிலிருந்து பூனா அங்கிருந்து காசி காசியிலிருந்து நேபாளம் பின் கல்கத்தா அங்கிருந்து கொழும்பு பின் ரங்கூன் மீண்டும் மும்பை கோவா அதன் பின் அமெரிக்கா என அவரது பயணம் நீள்கிறது. தனி ஒரு மனிதராக அலைகிறார்.
அபுனைவுகள் வாசிக்கையில் அதிலிருந்து நாம் வெகுதூரம் கற்பனை செய்து கொள்ள முடியும் என்பதால் நான் அவற்றை விரும்பி வாசிப்பேன். இந்நூல் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியின் இந்திய சித்திரத்தை எனக்கு அளித்தது. நாடெங்கும் பசி பற்றாக்குறை வறுமை நோய்மை. பண்பாட்டு மாண்புகள் அனைத்தும் பாழ்பட்டுக் கிடக்கின்றன.
தர்மானந்த கோசாம்பி நூலில் எங்கும் மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் 1890 - 1905 வரையிலான அவரது பயணங்கள் தேடல்கள் நூலில் பதிவாகியுள்ளன. காந்தியின் அரசியல் பிரவேசம் அதன் பின்னரே நிகழ்கிறது. காந்தி எவ்விதம் தனது ஒருமைப்பாட்டு முயற்சிகளை வடிவமைத்தார் என்பதை கோசாம்பி காட்டும் சமூகச் சித்திரத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
எல்லா வகையிலும் எதிர்மறையான சூழல் நிலவிய காலகட்டத்திலும் மகாத்மா காந்தி ஐயமின்றி நாம் ஒரே தேசம் என்றார். அதனை இந்திய தேசிய காங்கிரஸ் செயல்பாடுகள் மூலம் செய்தும் காட்டினார். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அவர் சாமானியரான மிகப் புதிய பலரை அரசியலுக்குள் கொண்டு வந்தார் என்பதும் அவர்களே இந்த தேசத்தின் அரசியல் கட்டுமானத்துக்கு அடிகோலியவர்கள் என்பதையும் நான் எண்ணிப் பார்த்தேன்.