Thursday, 11 October 2018

நீர் நகரும் ஆற்றின்
கரையில்
காற்றில்
அசைந்து
எரிந்து கொண்டிருக்கிறது
சிதைநெருப்பு
கனன்று
குமுறிய
சாம்பல்
குளிர்ந்து
கரைந்து போகிறது
நதியோட்டத்தில்
அமைதியாய்
இன்மையாய்
இன்னும்
யாரும் வெளிப்படாத
நகரின்
அதிகாலை ரம்யங்கள்
ஆடி முன் அமரும்
பாவையென
அலங்கரிக்கத்
துவங்குகின்றன
தமக்காக

Wednesday, 10 October 2018

என் அவமதிப்புகளுக்காக
என்னால் ஏற்பட்ட
ஆறா ரணங்களுக்காக
என் இன்னாத சொற்களுக்காக
நான் உண்டாக்கிய
தீரா வலிகளுக்காக

இன்று
இப்பொழுதில்

உங்களிடம்
மன்னிக்கக் கோருகிறேன்
மீண்டும் மீண்டும்
மன்னிக்கக் கோருகிறேன்

என் விழிகளிலிருந்து
வீழும்
நீர்த்துளிகள்
மணல்துகள்களாய்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
முடிவற்ற கடலை

Tuesday, 9 October 2018

இன்று
ஒரு சாலைத் திருப்பத்தில்
கணிக்காத கணம் ஒன்றில்
மிக மென்மையாய்
மோதியும் மோதாமலும்
எதிரெதிராய் வாகனங்கள்
சந்தித்த கணத்தில்
பரஸ்பரம்
நாங்கள்
புன்னகைத்தோம்
நுணுக்கமான தருணம்
சட்டென்று
கொண்டு சேர்த்த
எதிர்பாராமைக்காக
இனிமைக்காக
ஆசுவாசத்துக்காக

Monday, 8 October 2018

உடல் கொண்ட மனங்கள்
குழுமிய துறையில்
பலிச்சோறு சுமந்த
வாழையிலைகள்
நதியில்
மிதந்தன
அங்கும் இங்கும்
திகைத்து

ஏற்ற இறக்கங்கள் கொண்ட
மனிதக் குரல்களின்
உச்சரிப்பு
நிறைந்திருந்தது
சில்வண்டுகளின் ஒலியென

இன்னும் சொல்லப்படாத வார்த்தைகள்
இன்னும் கேட்கப்படாத மன்னிப்புகள்
இன்னும் கரைந்து கொண்டிருக்கும் கண்ணீர்
நதியிலும்
காற்றிலும்
அலை மோதிக் கொண்டிருந்தது
எந்திரகதி செயல்பாடுகளுக்கும்
இடையே

கைவிட்ட
கைவிடப்பட்ட
நெகிழும் உணர்வுகள்
ஆறா ரணங்கள்
நீர் ஈரமாய் மிதந்தன
காற்றில்

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு
எல்லாவற்றையும் சுமந்து கொண்டு
தன் கடன் ஆற்றி
கடல்நோக்கி
நடந்தது நதி

Sunday, 7 October 2018

பகலும் அற்ற
இரவும் அற்ற
ஒரு பொழுதில்
சிவந்த விண்முகத்தின்
புன்னகை
சில கணங்கள் ஒளிர்த்து
சில கணங்கள் ஒலித்து
முகத்தில் தொட்டது
சிறு தூறல் துளிகளாக
மாமழையாக

Saturday, 6 October 2018

எப்போதாவது
சிலிர்க்க வைக்கிறது
நம் மீது காட்டப்படும் அக்கறைகள்

என்றோ ஒரு நாள்
திகைத்து நிற்கிறோம்
நம் முன்னே
விரிந்து கிடக்கும்
இனிமையின் பெரும்பரப்பின் முன்

வீழும் துளிநீர்
இல்லாமலாக்கி விடுகிறது
உடனிருக்கும்
பெருஞ்சுமைகளை

நம்பிக்கைகள்
நிறையும்
நாட்கள்
நதிபோல
நடந்து கொண்டுதான் இருக்கின்றன
பரபரக்கின்றன
கால்கள் நகரும்
சாலைகள்
எரிந்து விழும்
நட்சத்திரம்
சட்டென
மறைகிறது
காற்றில்
பார்வையில்
நாளின்
சில பொழுதில்
நதிக்குள்
பாய்கிறது
திரைகடல்

Wednesday, 3 October 2018

சாலைக்கு மேலே
இன்னும் உதிராத
முருங்கைப்பூவை
கொறித்துக் கொண்டிருக்கிறது
சிறு அணில்
சாலைக்கும்
பூவுக்கும்
இடையில்
காலெடுத்துக்
கடந்து சென்றேன்
கிரீச் கிரீச்
ஒலியுடன்

Monday, 1 October 2018

நடக்க நடக்க
வளர்ந்து கொண்டே இருக்கிறது
இந்த பெரிய உலகின்
தூரம்
பறக்க பறக்க
சென்று கொண்டேயிருக்கிறது
முடிவற்ற வானம்
மரத்திலிருந்து கொட்டும் பூக்கள்
அழகாய்த்தானிருக்கின்றன
எப்போதும்
இருந்தாலும்
எப்படியோ
வந்து சேர்ந்து விடுகின்றன
விளக்கின் நிழல்
போல
சில கவலைகள்