Monday 8 October 2018

உடல் கொண்ட மனங்கள்
குழுமிய துறையில்
பலிச்சோறு சுமந்த
வாழையிலைகள்
நதியில்
மிதந்தன
அங்கும் இங்கும்
திகைத்து

ஏற்ற இறக்கங்கள் கொண்ட
மனிதக் குரல்களின்
உச்சரிப்பு
நிறைந்திருந்தது
சில்வண்டுகளின் ஒலியென

இன்னும் சொல்லப்படாத வார்த்தைகள்
இன்னும் கேட்கப்படாத மன்னிப்புகள்
இன்னும் கரைந்து கொண்டிருக்கும் கண்ணீர்
நதியிலும்
காற்றிலும்
அலை மோதிக் கொண்டிருந்தது
எந்திரகதி செயல்பாடுகளுக்கும்
இடையே

கைவிட்ட
கைவிடப்பட்ட
நெகிழும் உணர்வுகள்
ஆறா ரணங்கள்
நீர் ஈரமாய் மிதந்தன
காற்றில்

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு
எல்லாவற்றையும் சுமந்து கொண்டு
தன் கடன் ஆற்றி
கடல்நோக்கி
நடந்தது நதி