Monday 20 May 2019

உச்சி

கதவுகள் மூடியிருக்கின்றன
விதவிதமான கதவுகள்
விதவிதமான கதவடைப்புகள்
யாரோ சிலர் வாசலில் தயங்கி நிற்கிறார்கள்
கலைந்து கிடக்கும் செருப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
உச்சிவெயிலில் வீதியில் தனியாக
நடந்து செல்கின்றனர் வழிப்போக்கர்
குடிக்க தண்ணீர் வேண்டும்
பார்வையில் நிரம்பி
மெல்ல வயிற்றில் நிரம்பும்
குளிர்ந்த நீர்
வேப்பமர நிழலில்
முத்து மாரியம்மன்
வந்து சேர்ந்த
நாதஸ்வர கோஷ்டி
தவில் நாதஸ்வரத்தை
பத்திரப்படுத்தி விட்டு
துண்டை விரித்துப் படுக்கிறது
கிளைகளில் கிரீச்சிடுகின்றன
அவ்வப்போது
சில குருவிகள்